×

தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கியது டிட்வா புயல் 14 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்: சென்னையில் விடிய விடிய மழை

* 90 கிமீ வேகத்தில் காற்று வீசும், திருவள்ளூருக்கு அதி கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தை மிரட்டி கொண்டிருந்த டிட்வா புயல் சென்னையை நெருங்கி வருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் டிட்வா புயல் உருவாகி தமிழகத்தை கடுமையாக மிரட்டி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்தது. நெல்லை, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து காலை வரை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து கடும் குளிருடன் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு வரை பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது.

இதனால், அலுவலகம் சென்று வீடு திரும்பியவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே நேரத்தில் சென்னையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்பகுதிகள் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அலைகள் பல அடி தூரத்துக்கு எழுந்து ஆக்ரோஷமாக காட்சியளித்தது. அதே நேரத்தில் டிட்வா புயலால் இன்றும் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் “டிட்வா” புயல் நிலவி வந்தது. இது தொடர்ந்து நேற்று காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவியது.

அதன் பிறகு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று பகல் 11.30 மணி அளவில், வேதாரண்யத்துக்கு தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும்.

அப்படி வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இருந்து நேற்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், இன்று அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், மாலையில் 25 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும். இதனால், இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 1ம் தேதி (நாளை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 2ம் தேதி மற்றும் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4 மற்றும் 5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுவை கடலோரப்பகுதிகளில் இன்று காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை வரை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை வரை காற்றின் வேகம் அதிகரித்து மாலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், 1ம் தேதி முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்ச தீவு மாலத்தீவு பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ் கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்த நாட்களில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 25 சென்டி மீட்டர் மழை பெய்தது.

வேதாரண்யம் 19 செ.மீ, வேளாங்கண்ணி 13 செ.மீ, திருப்பூண்டி, நாகப்பட்டினத்தில் தலா 12 செ.மீ, தலைஞாயிறு 11 செ.மீ, பாம்பன், காரைக்கால் (காரைக்கால்) தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினரும், உள்ளாட்சித்துறையினரும் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் மீட்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* எங்கே இருக்கிறது புயல்?
வேதாரண்யத்துக்கு தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

* இன்று அதிகாலை, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும்.

Tags : Tidwa Storm ,Tamil Nadu ,District 14 ,Chennai ,Thiruvallur ,Tidwa ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED ஒன்றிய அரசின் அடுத்த இடி வர்த்தக...