சென்னை: ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.203 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் முற்றிலும் மூடும் சூழலும், உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை, கடந்தாண்டு ஏப்ரல் 8ம் தேதி ரூ.50 அதிகரிக்கப்பட்டது. அதன்பின், இவ்விலையில் 10 மாதங்கள் மாற்றம் செய்யாமல் இருந்த எண்ணெய் நிறுவனங்கள், கடந்த மாதம் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, விலை உயர்வை காரணம் காட்டி ரூ.50ஐ அதிகரித்தன. இதனால் கடந்த மார்ச் 7ம் தேதி டெல்லியில் ரூ.913, மும்பையில் ரூ.913.50, கொல்கத்தாவில் ரூ.939, சென்னையில் ரூ.928.50, சேலத்தில் ரூ.946.50 என அதிகரித்தது.
இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான (ஏப்ரல்) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. அதில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த மார்ச் 7ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே நீடிக்கிறது. ஆனால், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.195 முதல் ரூ.220 வரை அதிகரித்து அதிரடி காட்டியுள்ளன. கடந்த மாதம் சென்னையில் ரூ.2043.50 என இருந்த நிலையில் ரூ.203 அதிகரித்து ரூ.2,246.50 ஆக உயர்ந்துள்ளது.
இதுவே சேலத்தில் ரூ.1992.50ல் இருந்து ரூ.203 அதிகரித்து ரூ.2195.50 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. டெல்லியில் ரூ.1883ல் இருந்து ரூ.195.50 அதிகரித்து ரூ.2078.50 ஆகவும், மும்பையில் ரூ.1835ல் இருந்து ரூ.196 அதிகரித்து ரூ.2031 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1990ல் இருந்து ரூ.218 அதிகரித்து ரூ.2208 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்க கூட்டுப்படைகள் போர் தொடுத்துள்ளதால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்வது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹர்முஸ் ஜலசந்தி நீர்வழிப்பாதையை கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்கள் கடப்பதை ஈரான் தடுத்திருப்பதால், உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கடந்த மார்ச் மாத துவக்கத்தில் கச்சா எண்ணெய் வரத்து அடியோடு நின்றது. தற்போதும் மிக குறைந்த அளவில், அதாவது காஸ் சிலிண்டருக்கான எரிபொருட்களை சுமந்துக்கொண்டு 10க்கும் குறைவான கப்பல்களே இந்தியா வந்தடைந்திருக்கிறது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்திருக்கிறது.
இதனிடையே காஸ் சிலிண்டருக்கான எரிபொருள் உற்பத்தியை அதிகளவு மேற்கொள்ளும் சவுதி அரேபியா, குவைத் நாடுகள் மீது ஈரான் ஏவுகணை கொண்டு தாக்கி வருவதால் அங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு வருகிறது. இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இருப்பு வைத்திருந்த கச்சா எண்ணெய் கொண்டு தற்போது வரை மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வருகிறது.
இந்த கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், அதிக விலை கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் நிலை உருவாகி இருப்பதாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 105 டாலருக்கு மேல் சென்றதாலும் எரிபொருட்கள் விலையை உயர்த்தும் கட்டாயத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் சென்றுள்ளன. இதனால் தான் நடப்பு மாதம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.200க்கு மேல் அதிகரித்திருப்பதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது 19 கிலோ வர்த்தக சிலிண்டர் உற்பத்தி, சப்ளையை 30 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதுவும் பள்ளி, கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகளுக்கு மட்டுமே வர்த்தக சிலிண்டரை வழங்குகின்றனர். ஓட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் மட்டும் மிக குறைந்த அளவில் ஓட்டல்கள், பேக்கரிகள், வணிக நிறுவனங்களுக்கு வர்த்தக சிலிண்டர் கொடுக்கின்றனர். அதனை வைத்து ஓட்டல் உரிமையாளர்கள் சமாளித்து வருகின்றனர்.
தற்போது தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் 50 சதவீத அளவுக்கு ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓட்டல்களில் கூட்டு, பொரியல், ரசம், சாம்பார் என பல்வேறு உணவுகள் வழங்கி வந்த நிலையில் தற்போது சம்பார், தயிர், தக்காளி சாதம் என ஒரே உணவை சமைத்து விற்பனை செய்கின்றனர்.
இப்படி சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கும் சூழலில் ரூ.203 என சிலிண்டர் விலையை நடப்பு மாதம் உயர்த்தி இருப்பதால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயர்த்தப்படும் அபாயம் உருவாகியுள்ளது. தட்டுப்பாடு காரணமாக பல ஓட்டல்களில் விலையை உயர்த்தி இருக்கும் சூழலில், தற்போது சிலிண்டர் விலையை அதிகரித்து இருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
* தேர்தலுக்கு பின் வீட்டு காஸ் விலையும் ஏறும்
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடப்பதால் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தாமல் ஒன்றிய பாஜ அரசு வைத்துள்ளது. இந்த தேர்தல் முடிந்த பின் அதன் விலையும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
* பெட்ரோல், டீசல் விலை ஏப்.29க்கு பின் ரூ.10 உயரும்
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு விலை உயர்வு காரணமாக வர்த்தக சிலிண்டர் விலையை நடப்பு மாதம் ரூ.200க்கு மேல் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ள நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இந்த விலை உயர்வு என்பது பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.10 வரை உயரும். அதேபோல், வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் ரூ.100 வரை அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கையை ஒன்றிய பாஜ அரசு நிறுத்தி வைத்துள்ளது. 5 மாநிலங்களிலும் ஏப்ரல் 29ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
