திருப்பூர்,அக்.1: திருமுருகன்பூண்டி பேரூராட்சிப் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சியில், நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் ஆய்வு செய்யும் பேரூராட்சி சுகாதாரத் துறையினர், காய்ச்சல் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பழைய மற்றும் உடைந்த பொருட்கள், தேங்காய் ஓடு மற்றும் டயர் போன்றவற்றில் தண்ணீர் தேங்கியிருந்தால், அவற்றினை அப்புறத்தி வருகின்றனர். அதேபோல், எவரேனும் காய்ச்சல் பாதிப்பில் இருந்தால், அவர்களை மருத்துவமனை சென்று, சிகிச்சை பெற அறிவுறுத்துகின்றனர்.
‘அபேட்’ மருந்து தெளித்து, கொசு உற்பத்தியும் தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், 10வது வார்டு பாரதி நகரில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, செயல் அலுவலர் குணசேகரன் பொதுமக்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்தும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.