சென்னை: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில், மக்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து நிற்கும் என்று மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிவித்துள்ளார். இதுகுறித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறவழி ஜனநாயக போராட்டமானது கடந்த பி.11 அன்று 200 நாட்களை எட்டியுள்ளது. அரசு அப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. பரந்தூர் பகுதி கிராம மக்களின் நியாயமான எதிர்ப்பையும், ஜனநாயக அமைப்புகளின் கோரிக்கையையும், சூழலியல் ஆர்வலர்களின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பரந்தூர் விமான நிலைய திட்டப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பது என்பது கண்டிக்கத்தக்கது. ஆகவே, 200 நாட்களாக அறவழியில் போராடி வரும் மக்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்த்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.