திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில் முதன்முறையாக தோணிகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்தனர். திருவில்லிபுத்தூரில் நகரின் மையப்பகுதியில் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் உள்ளது. இக்குளத்தில் மீன்களை வளர்த்து பிடிக்க ஏலம் விடுவர். இதன்படி ஏலம் எடுத்தவர்கள் மீன் குஞ்சுகளை வாங்கி வந்து திருமுக்குளத்தில் விட்டு வளர்த்து வந்தனர். இந்நிலையில், வளர்ந்த மீன்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் இருந்து நான்கு மீனவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் சிறிய அளவிலான 4 தோணிகளை கொண்டு வந்து குளத்தில் காலை முதல் மாலை வலைகளை விரித்து மீன் பிடித்தனர். இதில், கட்லா, கெண்டை, கெளுத்தி என மீன்களை அள்ளினர். பிடித்த மீன்களை கரைக்கு கொண்டு வந்து, அங்கு எடை போட்டு, மதுரை மீன் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தனர்.