பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தின் இறுதி நாளான நேற்று தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியம் குறித்தான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி ஆணையர் வசந்தி ஆலோசனையின்பேரில் தடுப்பூசி முழுமையாக இரு தவணைகளும் செலுத்தி கொண்டவர்கள் உள்ள வீடுகளையும், வீட்டில் வசிப்பவர்களை கண்டறிந்து அவர்களை பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்திலேயே முதல் முறையாக திருவேற்காடு நகராட்சியில் தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர்களை பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், அவர்களது வீட்டில் `தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வசிக்கும் இல்லம் இது’ என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் கலந்துக்கொண்டு சான்றிதழ் வழங்கியதோடு தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.