×
Saravana Stores

விவசாயிகளுக்கான நெல் களத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதை எதிர்த்த மனு: முடித்து வைத்தது ஐகோர்ட் கிளை

 

மதுரை, அக். 18: விவசாயிகளுக்கான நெல் களத்தில் புதிதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதை எதிர்த்த மனு, ஐகோர்ட் மதுரை கிளையில் முடித்து வைக்கப்பட்டது. திருமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருமங்கலம் அருகேயுள்ள கரிசல்பட்டியில் நெற்களம் உள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெற்கதிர்களை அங்கு கொட்டி தேக்கிவைப்பதுடன், வெயிலில் உலர்த்துவது வழக்கம். தற்போது நெல் களம் அமைந்துள்ள பகுதியில் புதிதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

எனவே, புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை நெல் களத்தில் அமைக்காமல், ஏற்கனவே இருக்கும் இடத்திலேயே கட்டுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அரசு தரப்பில், ஊராட்சி மன்ற கட்டிடம் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பொது அலுவலகம். அந்த பகுதியில் சிறிய அளவிலேயே ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. மீதமுள்ள இடத்தினை விவசாயிகளை வழக்கம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.

 

The post விவசாயிகளுக்கான நெல் களத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதை எதிர்த்த மனு: முடித்து வைத்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Manikandan ,Tirumangalam ,ICourt branch ,Dinakaran ,
× RELATED கூல்-லிப் அட்டையில் மண்டை ஓடு படம்: அச்சிடுவதற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு