×

புழல் அருகே மாசடைந்து காணப்படும் உபரிநீர் கால்வாய்: சீரமைக்க கோரிக்கை

புழல்: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி கால்வாய் சூரப்பட்டு, புத்தகரம் சாலை வழியாக புழல் கதிர்வேடு அடுத்த பத்மாவதி நகர், வீரராகவலு நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர் வழியாக மாதவரம் ரெட்டேரி வரை செல்கிறது. இதில், மாதவரம் மண்டலம் 31வது வார்டு கதிர்வேடு அடுத்த கட்டிட தொழிலாளர்கள் நகர் அருகில் நீர்வளத்துறைக்கு சொந்தமான இந்த கால்வாயில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கி உள்ளது. இவ்வாறு, தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமில்லாமல், அதில், உருவாகி வரும் கொசுக்களால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், மழைக் காலங்களில் அதிக மழை பெய்தால் கால்வாயில் தேங்கி இருக்கும் குப்பைகள், கழிவு நீர் மாதவரம் ரெட்டேரியில் கலக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், ரெட்டேரியில் உள்ள தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவு பொருட்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். கால்வாயில் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும். மேலும், கழிவுநீர் கால்வாயில் குப்பை மற்றும் கழிவு நீரை விடுபவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புழல் அருகே மாசடைந்து காணப்படும் உபரிநீர் கால்வாய்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Ampathur ,Koratur Lake ,Budhagaram Road ,Puzhal Kathirvedu ,Padmavathi Nagar ,Veeraragavalu Nagar ,Builders Nagar ,Madhavaram Rederi ,Madhavaram ,Dinakaran ,
× RELATED புழல் அருகே மாசடைந்த கால்வாய்