×

காஞ்சிபுரம் வட்டத்தில் 2 நாட்களுக்கு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டத்தில், உங்களை தேடி ஊங்கள் ஊரில் திட்ட முகாம் இன்று துவங்கி நாளை வரை நடக்கவுள்ளது என கலெக்டர் கலைச்செல்விமோகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி, ‘‘மக்களை தேடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். மேற்படி திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் (மூன்றாவது புதன் கிழமையில்) ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்பேரில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று (18.9.2024) காஞ்சிபுரம் வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்பும் பொதுமக்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை மணிக்கு மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் முகாம் நடவடிக்கைகள் விவரவருமாறு: காஞ்சிபுரம் வட்டத்தில் இன்று முதல் நாள் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இ-சேவை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், சத்துணவு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, பள்ளிகள் ஆகியவற்றை பார்வையிடுதல் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிருவாக அலுவலர் அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களை ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர், திட்டப்பணிகள் ஆய்வு செய்கிறார். அதன்பின், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை கள ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்த கருத்துகளின் மீது ஆய்வு கூட்டம் நடைபெறும்.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொதுமக்களிடம் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறுதல். மாலை 6 மணி முதல் அரசு விடுதிகள், பூங்கா, அறிவுசார் மையம், சமூக நலத்துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட மையங்களை பார்வையிடுதல், பேருந்து நிலையம், பொது கழிப்பிடங்கள், பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து, அரசு மருத்துவமனைகள் பார்வையிடப்படும். மாவட்டத்தில் சுற்றுப்பயணம் முடிந்து இரவு தங்கப்படும். பின்னர், இரண்டாம் நாள் 19.9.24ம்தேதி காலை 6 மணி முதல் காலை 8.30 மணி திடக்கழிவு மேலாண்மை, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைககள், குடிநீர் வசதி, பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முதலியவற்றை பார்வையிடப்படும். காலை 9 சுற்றுப்பயணம் முடிவுற்று தலைமையிடத்திற்கு திரும்புதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம் வட்டத்தில் 2 நாட்களுக்கு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Circle ,Kanchipuram ,Collector ,Kalachelvimohan ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்