×

அரசு பஸ் டிரைவருடன் தகராறு திருவனந்தபுரம் மேயர், கணவர் மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் நகர மேயர் ஆர்யா ராஜேந்திரன், அவரது கணவரும், பாலுசேரி தொகுதி சிபிஎம் எம்எல்ஏவுமான சச்சின் தேவ் உள்பட உறவினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களது வாகனத்துக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பஸ் டிரைவருக்கும், மேயருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

உடனே பஸ்சை வழிமறித்து காரை குறுக்கே நிறுத்தி டிரைவருடன் மேயர், அவரது உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். இந்தநிலையில் பஸ் டிரைவர் தன்னிடம் ஆபாச செய்கை காண்பித்ததாக கூறி மேயர் ஆர்யா ராஜேந்திரன் கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தார். இது குறித்து பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி டிரைவர் போலீசில் புகார் செய்தார்.

ஆனால் அவரது புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தனர். இந்தநிலையில் கேரள உயர் நீதிமன்ற வக்கீலான பைஜு நோயல் அரசு பஸ்சை வழிமறித்து பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறு செய்த மேயர் ஆர்யா ராஜேந்திரன், எம்எல்ஏ சச்சின் தேவ் உள்பட உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மேயர், அவரது கணவர், உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து மேயர் ஆர்யா ராஜேந்திரன், கணவர் சச்சின் தேவ் எம்எல்ஏ, உறவினர்கள் உள்பட 5 பேர் மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அரசு பஸ் டிரைவருடன் தகராறு திருவனந்தபுரம் மேயர், கணவர் மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Mayor ,Arya Rajendran ,Palushery Constituency ,CPM ,MLA ,Sachin Dev ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பஸ் டிரைவருடன் மோதல்: எம்எல்ஏ, மேயர் மீது போலீஸ் வழக்கு பதிவு