பெரம்பூர்: தந்தையை கத்திரிக்கோலால் குத்திய மகனை கைது செய்தனர். மதுகுடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். சென்னை கொளத்தூர் ஜிகேஎம். காலனி 38வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (55). இவர் கொத்தனார். இவரின் மனைவி சாவித்திரி. இவர்களுக்கு ஸ்ரீகணேஷ் (29), சூர்யா (26) ஆகிய மகன்கள் உள்ளனர். இதில், சூர்யா எலக்ட்ரீசியனாக உள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சூர்யா மேலும் குடிப்பதற்காக தந்தையிடம் பணம் கேட்டபோது அவர் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சூர்யா, வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார். இதன்பின்னர் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் தந்தை நாகராஜனை சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து புகாரின்படி, கொளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து சூர்யாவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
