×

எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு 7 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மும்மொழி படிக்க தேவையில்லை: தற்போதைய மொழிப் பாடங்களையே தொடரலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஜூலை 1 முதல் மூன்று மொழிகளைத் தங்கள் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் படிக்க வேண்டும் எனவும் அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ கடந்த மே மாதம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என்று கூறி ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பல மாணவர்களும் பெற்றோர்களும் நீதிமன்றத்தையும் அணுகினர். பொதுமக்களின் இந்த கடுமையான அழுத்தத்திற்கு அடிபணிந்த மத்திய அரசு, தற்போது இந்த முடிவை தளர்த்தியுள்ளது. ”குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழிகளைப் படிக்க வேண்டும் என்ற விதிமுறை 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே இனி புதிதாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஏற்கனவே 7 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இது முன் தேதியிட்டு அமல்படுத்தப்படாது\” என சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி இந்த ஆண்டு 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே 3 மொழிகள் கற்பிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் 7-ம் வகுப்பில் இருந்து படிப்படியாக 3-வது மொழியை மாணவர்கள் பயில்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Union government ,CBSE ,New Delhi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...