×

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 231 பேர் வேட்புமனு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது வேட்புமனுதாக்கல் நேற்றுடன் முடிந்தது

திருவண்ணாமலை, ஏப்.7: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில், மொத்தம் 231 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, கடந்த 30ம் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கி, நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, செங்கம்(தனி), கிழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி(தனி) ஆகிய 8 சட்டமன்ற ெதாகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், அந்தந்த தொகுதிகளில் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் நடந்தது.

இந்நிலையில், வேட்புமனுதாக்கல் தொடங்கியதிலிருந்து கடைசி நாளான நேற்று 231 பேர் மனுதாக்கல் செய்தனர். அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் 35 , செங்கம் தொகுதியில் 25, கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 37, கலசபாக்கம் தொகுதியில் 30, போளூர் தொகுதியில் 30, ஆரணி தொகுதியில் 30, செய்யாறு தொகுதியில் 23, வந்தவாசி தொகுதியில் 21 வேட்பாளர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்றுவரை மொத்தம் 231 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 37 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களின் பெயரில் உள்ள சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில், வேட்பாளர்கள் அல்லது அவரது முகவர்கள் நேரில் கலந்துகொள்ளலாம். சம்மந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை நடைபெறும். தகுதியில்லாத, முறையாக பூர்த்தி செய்யாத, சட்டப்பூர்வ ஆட்சேபனைக்கு உரிய வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு, தகுதியுள்ள மனுக்கள் ஏற்கப்படும். அதன் விபரம் இன்று மாலை 3 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 9ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai district ,Tamil Nadu assembly ,
× RELATED தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்