×

அய்யப்பன்தாங்கலில் பரபரப்பு; டி.வி சீரியல் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை: கணவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கலில் டி.வி.சீரியல் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்தார். குடும்ப பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையை சேர்ந்தவர் சுபாஷினி (எ) சாஸ்விபாலா (36). தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் துணை நடிகையாக நடித்து வந்தார். இவர் பெங்களூருவை சேர்ந்த பிபின் சந்திரன் (38) என்பவரை கடந்த 2024 ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.

இந்நிலையில், டி.வி. சீரியல்களில் நடிப்பதற்காக சென்னைக்கு வர நேரிடும் என்பதற்காக அய்யப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்திருந்தார். சென்னைக்கு வரும்போது இந்த வீட்டில்தான் அவர் தங்குவார். அதேபோன்று சீரியலில் நடிப்பதற்காக கடந்த 3ம் தேதி பெங்களூரில் இருந்து அய்யப்பன்தாங்கலுக்கு வந்தார். நேற்று நள்ளிரவில் கணவருடன் வீடியோ காலில் பேசி கொண்டிருந்தார். அப்போது குடும்ப பிரச்னை காரணமாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சுபாஷினி, கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிபின் சந்திரன், உடனே அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக காவலாளி, போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சுபாஷினி கிடந்தார். அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே சுபாஷினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர். மேலும் சுபாஷினியின் கணவர் பிபின் சந்திரனிடமும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போரூர் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். டிவி சீரியல் துணை நடிகை ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Poonamalli ,Subashini ,A) Sasvipala ,Sri Lanka ,
× RELATED ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ரூ.4.30 கோடி...