திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுச்சத்திரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுக்கு முன் ரூ.17 லட்சம் மதிப்பில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. இது முறையான பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வந்தது. தற்போது ரூ.25 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு கடந்த ஓராண்டிற்கு முன் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும் கிராம சேவை மையம் இன்றுவரை முறையான பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடப்பதால் கட்டிடத்தை சுற்றி புதர் மண்டி கிடப்பதுடன் குடிமகன்களின் கூடாரமாகவும் மாறிவிட்டது. எனவே, புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராம சேவை மையத்தை முறையான பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
