கலசப்பாக்கம், ஏப்.3: கலசப்பாக்கம் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மோட்டூர், பில்லூர், பழங்கோயில், தென் பள்ளிப்பட்டு, சிறுவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை நேற்று திட்ட இயக்குனர் இரா.மணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடிநீர், சுகாதாரம், மின் விளக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவில் முடிக்குமாறு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது பிடிஓ கல் நிர்மலா விஜயலட்சுமி, முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
