சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில், பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. பியூஷ்கோயல் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியும் இதுவரை பாஜக வேட்பாளர் தேர்வில் முடிவு எட்டப்படவில்லை. கட்சி மேலிடம் மொடக்குறிச்சியில் போட்டியிட அண்ணாமலையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்துள்ளார்.
தான் விரும்பிய தொகுதி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள அண்ணாமலை போட்டியிடுவதில்லை என முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை தனது முடிவை கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துள்ளதாக பாஜக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மட்டுமே செய்வது எனவும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை முடிவால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணாமலையை புறக்கணிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் மீது அவரது ஆதரவாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
அண்ணாமலை பின்னால் எப்போதும் அணிவகுப்போம் என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணாமலை புறக்கணிக்கப்படுவதால் பாஜக வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் அவரது ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
