பங்குனி உத்திரம் (1.4.2026)
பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரம் பற்றி சில முக்கிய விஷயங்களைப் பார்ப்போம். பங்குனி உத்திரம் முருகனுக்குரிய சிறப்பு நோன்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் பன்னிரண்டாம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் பன்னிரண்டாம் நட்சத்திரம் உத்திரம். எனவே பன்னிரண்டு கைகள் உடைய வேலவனுக்குச் சிறப்பான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்று மாலை வரை உத்திர நட்சத்திரம். அதற்குப் பிறகு அஸ்த நட்சத்திரம் வருகிறது. அதோடு பௌர்ணமியும் அன்று காலை முதல் இருக்கிறது. எனவே, பெரும்பாலான ஆலயங்களில் ஏப்ரல் ஒன்றாம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சில கோயில்களில் மட்டும் மார்ச் 31 செவ்வாய்கிழமையன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் – தெய்வானை, சிவன் – பார்வதி மற்றும் ஆண்டாள் – ரங்கநாதர் ஆகியோரின் திருமணங்கள் இந்த நாளில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
எல்லா ஆலயங்களிலும் சிறப்பு
பங்குனி உத்திரத்தை பொருத்தவரையில் அநேகமாக எல்லா கோயில்களிலும் சிறப்பான திருநாளாக இருக்கும். முருகன் கோயில்களில் விசேஷமான வழிபாடும் அபிஷேகமும் இருக்கும். சிவன் கோயில்களிலும் பங்குனி உத்திரம் விசேஷம். பல அம்மன் கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். வைணவ கோயில்களிலும் (ஸ்ரீரங்கம் உட்பட) பங்குனி உத்திரம் விசேஷமான நாளாகக் கொண்டாடப்படும். எல்லாக் கோயில்களிலும் முக்கியமாக தெய்வத் திருமணங்கள் நடைபெறும். அறுபடை வீடுகளில் ஆரம்பித்து சாதாரண கிராமங்களில் இருக்கக்கூடிய முருகன் கோயில்கள் உட்பட பங்குனி உத்திர திருநாள் பரவசமாய் கொண்டாடப்படும். சிங்கப்பூர், மலேசியா, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கனடா நாடுகள் என பல நாடுகளிலும் பங்குனி உத்திரம் நம் நாட்டைப் போலவே அன்றைக்கு காவடி எடுத்தல், பால்குடம் சுமத்தல் என அத்தனை வைபவங்களோடு நடைபெறும்.
பங்குனி உத்திரத்தில் நடந்த தெய்வத் திருமணங்கள்
சைவத்திலும் வைணவத்திலும் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு பங்குனி உத்திரத்தை ஒட்டித்தான் திருமண உற்சவங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில்தான் இப்பொழுதும் கோயில்களில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. என்னென்ன திருமண வைபவங்கள் என்பதைப் பார்ப்போம்.
*சிவன் – பார்வதி திருமணம்
*தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன் – சீதை, லட்சுமணன் – ஊர்மிளா, பரதன் – மாண்டவி, சத்ருக்னன் – சுருதகீர்த்தி திருமணங்கள்
*முருகன் – தெய்வானை திருமணம்
*பெருமாள் – மகாலட்சுமி திருமணம்
*ஆண்டாள் ரெங்கமன்னார் திருமணம்
*மீனாட்சி திருமணம்
பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
பெருமாள் கோயில்களில் பங்குனி உத்திரம்
பெருமாள் கோயிலிலும் பங்குனி உற்சவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திர ஆண்டாள் திருக்கல்யாணம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தில்லை கோவிந்தராஜரின் அவதார திருநட்சத்திரம் பங்குனி உத்திரம் என்பதால், தேவாதி தேவனுக்கும் புண்டரீகவல்லித் தாயாருக்கும் திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெறும். காஞ்சியில் வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரம் காலை பெருமாள், தாயார், மலையாள நாச்சியார் திருமஞ்சனம் நடைபெறும். அன்று மாலை உபய நாச்சியார், தாயார் புறப்பாடாகி, நான்கு கால் மண்டபத்தில் மாலை மாற்றுதல் நடைபெறும். இன்று ஒருநாள் மட்டும் தாயார் சந்நதியில் பெருமாள் எழுந்தருள்வார். சீர்காழிக்கு அருகே உள்ள திருவாலி திருநகரி தலத்தில் பங்குனி உத்திரம் பெருவிழாவாக நடைபெறும். இத்திருவிழாவின் 9ம்நாள் இரவு வேடுபறி உற்சவம். 9ம் நாள், பகலில் திருவாலியில், திருநகரி வயலாளி மணவாளனுக்கும், அமிர்த கடவல்லி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரம் சிறப்பாக நடைபெறும் ஆலயங்களில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலும் ஒன்று. அங்கு பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா 14 தினங்கள் நடைபெறும். அதன் கொடியேற்றம் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் நான்கு ராஜ வீதிகளிலும் எழுந்தருள்வார். மார்ச் மாதம் 27-ஆம் தேதி, 63 நாயன்மார்கள் உற்சவமும், 28-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும், மார்ச் 31-ஆம் தேதி பத்தாம் நாள் உற்சவமாக இரவு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பங்குனி உத்திரத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வுகள் விமரிசையாக நடைபெறும். காலை நேரத்தில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோயிலுக்குச் சென்று, மாலை நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும். அம்மன் மரவர்ண சப்பரத்திலும், சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வருவர்.
பழனியில் பங்குனி உத்திரம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் பிரபலம். 10 நாட்கள் நடைபெறும் விழாவில், திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும். 10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலை தந்தப் பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி – தெய்வானையுடன் எழுந்தருள லட்சக்கணக்கான பக்தர்கள் பால், பன்னீர், இளநீர் காவடிகளை ஏந்தி, பாதயாத்திரையாக வந்து மகா அபிஷேகம் செய்து, தங்க ரதத்தில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். பங்குனி உத்திரத்தன்று வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக் கல்யாணமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறும்.
மயிலையில் 63 நாயன்மார் விழா
சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மார்ச் 23, 2026-ல் தொடங்கி 10 நாள் திருவிழா நடக்கும். கொடியேற்றம், அதிகார நந்தி, அறுபத்து மூவர் வீதி உலா, பங்குனி உத்திரத் திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும். இந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி அதிகார நந்தி, 29-ஆம் தேதி தேரோட்டம், மார்ச் 30-ஆம் தேதி அறுபத்து மூவர் வீதி உலா, ஏப்ரல் ஒன்றாம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும். பங்குனி உத்திரத்தில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் திருக்கல்யாண திருவிழாவும் நடைபெறும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி-வள்ளி திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் பிரசித்தமாக நடைபெறும்.
அம்மனுக்கு முழு அபிஷேகம்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழாவாகும். இக்கோயிலின் அம்மன் சந்நதியில், ஆண்டின் மூன்று முக்கிய நாட்களில் (ஆடிப்பூரம், நவராத்திரி நவமி, பங்குனி உத்திரம்) ஒன்றான பங்குனி உத்திரத்தன்று திரிபுரசுந்தரி அம்மனுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த நாளில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறும். குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாளாகவும், பங்குனி உத்திர தினம் இருக்கிறது. இத்தினத்தில் குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், குலம் சிறக்கும். மூதாதையரின் ஆசியும் கிடைக்கும். பங்குனி உத்திர நாளில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் சிறப்பானது. பங்குனி உத்திரத்தன்று முருகனை மனமுருகி வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் சுபமாக முடியும். நம்மால் முடிந்த அளவுக்கு மஞ்சள், சரடு, குங்குமம், கண்ணாடி என மங்கலப் பொருட்களை பெண்களுக்கு வழங்குவதும் விசேஷ பலன்களைக் கொடுக்கும்.
விரதம் இருப்பது எப்படி?
நினைத்ததெல்லாம் நிறைவேற்றும் பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும். ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், பசி தாங்க முடியாதவர்கள், பால் – பழம் அருந்தலாம். பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடி சங்கல்பம் செய்து கொண்டு விரதத்தைத் தொடங்கி விட வேண்டும். அன்று முழுதும் முருகன் நாமத்தை ஓதவேண்டும். பக்திப் பாமாலைகளை குழுவாகவோ தனியாகவோ பாடலாம். மாலையில் பெருமாள் முருகன், சிவன், கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். பெருமாள் தாயார் அபிஷேகம் பாருங்கள் மற்றும் சிவபெருமானுக்கும், உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை பாருங்கள். ஸ்ரீராமாயணம் மகாபாரதம், சிவபுராணம், ஸ்கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் தேவாரம் போன்றவற்றைப் படிக்கலாம்.
