×

திருப்போரூர் முருகன், செம்பாக்கம் சிவன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

திருப்போரூர், ஏப்.1: திருப்போரூர், செம்பாக்கம் சிவன் கோயில்களில் நடைபெற்ற பங்குனி உத்திர திருக்கல்யாண வைபத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கார், வேன், பைக் மற்றும் பேருந்துகளில் குவிந்தனர். இதுமட்டுமின்றி சென்னையில் இருந்து நூற்றுக்கணக்கானோர், பாதயாத்திரையாக காவடி எடுத்தபடி திருப்போரூர் கோயிலுக்கு வந்தனர். முருகன் கோயிலை ஒட்டி உள்ள சரவணப் பொய்கையில் நீராடி, மொட்டை அடித்து வேல் தரித்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி எடுத்தும் பஜனை பாடல்களை பாடியும், நான்கு மாடவீதிகளிலும் உலா வந்தனர்.

நேற்று மாலை 6 மணிக்கு திருப்போரூர் பிரணவமலையில் உள்ள பாலாம்பிகை சமேத கைலாச நாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. காலை முதலே ஏராளமான பக்தர்கள் திருப்போரூர் பிரணவமலையில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சிவபெருமானை வழிபட்டனர். இரவு 7 மணிக்கு கைலாசநாதருக்கும், பாலாம்பிகை தாயாருக்கும் சிறப்பு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, இந்த திருமணத்தை கண்டு தரிசித்தனர். அதேபோன்று, செம்பாக்கத்தில் உள்ள அழகாம்பிகை உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்ற இந்த திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags : Panguni Uttara Thirukalyanam ,Thiruporur Murugan ,Sembakkam Shiva ,Thiruporur ,Sembakkam Shiva temples ,Panguni Uttara ,Chennai ,Kanchipuram ,Chengalpattu ,Vellore ,Tiruvallur ,Villupuram ,Tiruvannamalai… ,
× RELATED செங்கல்பட்டு அருகே உள்ள புதிய மலையேற்ற பாதை