×

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு!

ஷிம்லா : இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை அடுத்து 9 வீடுகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவின் போது மலையிலிருந்து உருண்டு வந்த பிரம்மாண்டமான பாறைகளும் இடிபாடுகளும் கிராமத்திற்கு மேலே சரிவான பகுதியில் ஆபத்தான நிலையில் நின்று கொண்டிருக்கின்றன. இது கீழே வசிக்கும் மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த அதிகாரிகள் நிலச்சரிவு அபாயத்தில் இருந்த ஒன்பது வீடுகளைச் சேர்ந்த பொதுமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். தற்போதைய நிலவரப்படி, கிராமத்திற்கு மேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மலைகளைக் குடையும் பணிகளே இத்தகைய நிலச்சரிவுக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நிலச்சரிவுப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் பாறைகள் சரியலாம் என்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே, அம்மாநில வானிலை ஆய்வு மையம் சம்பா, காங்க்ரா, குலு மற்றும் மண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மற்றும் வரும் வியாழக்கிழமை இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது.

மேலும் அடுத்த 5 நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் 24, 25, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது பனிப்பொழிவோ ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ropdu village ,Mandi district of ,Himachal Pradesh ,Ropdu ,Mandi district ,
× RELATED பூனையை வளர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை விட்ட மருத்துவர்!!