×

அமிர்தசரஸில் அதிர்ச்சி: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையின் போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை காவலர் ஜஸ்விந்தர் சிங் என்பவர், விசாரணையின் போதே மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங், ஒரு வழக்குத் தொடர்பாக என்.சி.பி அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்பூல்பூரா காவல் நிலைய அதிகாரி ஜக்ஜித் சிங் இது குறித்து கூறுகையில், விசாரணை நடந்து கொண்டிருந்த போதே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் இந்த உயிரிழப்பு நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த மரணத்தில் பெரும் சதி இருப்பதாக ஜஸ்விந்தர் சிங்கின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தனது மகனைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, பெல்ட்டாலும் ஷூக்களாலும் மிகக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக அவரது தாய் குர்மீத் கவுர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை மையத்தின் முன்பு திரண்ட உறவினர்கள், முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குக் காரணமான அதிகாரிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Amritsar ,Border Protection Force ,Drug Prevention Unit ,Chandigarh ,Border ,Jaswinder Singh ,Narcotics Detention Unit ,Amritsar, Punjab ,Jammu ,
× RELATED சாத்தான்குளம் வழக்கில் பொய் சொல்லி...