- உக்ரேனியர்கள்
- வடகிழக்கு மாநில எல்லை
- யூனியன் அரசு
- தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- வடகிழக்கு
- தேசிய புலனாய்வு அமைப்பு
- என்.ஐ.ஏ.
டெல்லி,: வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டு நபர்கள் அத்துமீறி நுழைந்து அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்ற விவகாரத்தில் ஒன்றிய அரசு உண்மையை விளக்கியுள்ளது. கடந்த 13ம் தேதி நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மூன்று உக்ரைன் நாட்டினரும், லக்னோ விமான நிலையத்தில் மூன்று உக்ரைன் நாட்டினரும், கொல்கத்தாவில் ஒரு அமெரிக்கரும் என மொத்தம் ஏழு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் உரிய அனுமதி இன்றி மிசோரம் மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்து, அங்கிருந்து எல்லை தாண்டி மியான்மரின் சின் மாகாணத்திற்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது. அங்குள்ள சில குழுக்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான நீண்டகால திட்டம் குறித்து பயிற்சி அளிக்க இவர்கள் முயன்றதாக போலீசார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சூழலில், நேற்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவியது.
அதில் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் மற்றும் கிளர்ச்சியை தூண்டுவதற்காக 3,000 உக்ரைன் நாட்டினர் இந்தியாவுக்குள் ஊடுருவி பதுங்கியிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஒன்றிய அரசு, அந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறானவை என்று கூறியுள்ளது. கைதானது 6 உக்ரைன் நபர்கள் மற்றும் ஒரு அமெரிக்கர் மட்டுமே என்றும், 3,000 பேர் என்பது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
