வாரணாசி: கங்கை நதியில் படகில் அசைவ விருந்து வைத்து சாப்பிட்ட நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியின் நடுவே கடந்த சில தினங்களுக்கு முன் படகில் ‘இப்தார்’ விருந்து என்ற பெயரில் அசைவ விருந்து கொண்டாடிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக யுவ மோர்ச்சாவைச் சேர்ந்த ரஜத் ஜெய்ஸ்வால் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 14 நபர்களையும் வாரணாசி நீதிமன்றம் வரும் 1ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் ஷஷாங்க் சேகர் திரிபாதி கூறுகையில், ‘இந்த கும்பல் தன்னிச்சையாகச் செயல்படவில்லை. யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் தான் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் படகில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, அதன் மிச்சங்களையும் எலும்புகளையும் புனிதமான கங்கை ஆற்றில் வீசியுள்ளனர். மேலும், படகு ஓட்டுநரை மிரட்டி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இந்த விருந்தை நடத்தியுள்ளனர். இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் திட்டமிட்டே இதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.
