புதுடெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் 59 உறுப்பினர்களின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர் மோடி, ‘அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை’ எனக் கூறினார். மாநிலங்களவையில் வரும் ஏப்ரல் முதல் ஜூலை மாதத்திற்குள் 59 எம்பிக்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சி மாநிலங்களவையில் நேற்று நடந்தது.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
இத்தகைய தருணங்கள் இயல்பாகவே கட்சி சார்ந்த பிளவுகளை கரைத்து விடுகின்றன. நம் அனைவருக்கும் இடையே பொதுவான உணர்வு மேலோங்குகிறது. அரசியலில் முற்றுப்புள்ளி என்பது இல்லவே இல்லை. எதிர்காலம் உங்களுக்காகவும் (மீண்டும் எம்பியாக அவைக்கு திரும்பாதவர்கள்) காத்திருக்கிறது. உங்கள் அனுபவமும் பங்களிப்பும் நமது பொது வாழ்வின் நீடித்த ஒரு பகுதியாக என்றென்றும் நிலைத்திருக்கும். முன்னாள் பிரதமர் தேவகவுடா, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் தங்கள் வாழ்நாளின் பாதிக்கும் மேலான காலத்தை நாடாளுமன்றத்திலேயே செலவிட்டுள்ளார்கள். இவர்கள் அரசியல் ஜாம்பவான்கள். அவர்கள் தொடர்ந்து அவைக்கு வருகை தரும் அந்த அர்ப்பணிப்பு உணர்வு அனைத்து புதிய எம்பிக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாகும். உண்மையிலேயே அது முன்மாதிரியானது.
ஓய்வு பெறும் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மிகவும் கனிவானவர், மென்மையாக பேசக் கூடியவர். கடுமையான உழைப்பாளி. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத காலத்தில் அவர் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடுவார். நாடாளுமன்றம் ஒரு திறந்த பல்கலைக்கழகமாக செயல்படுகிறது. இங்கு 6 ஆண்டு கால மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், ‘‘இந்த தருணம் பாதையின் முடிவல்ல, மாறாக பாதையின் ஒரு வளைவு மட்டுமே. ஓய்வு பெறும் உறுப்பினர்கள் தொடர்ந்து பொது வாழ்வில் தங்கள் பங்களிப்பை அளிப்பார்கள் என நம்புகிறேன். இங்கு ஒருவரை ஒருவர் பிரிந்து செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தாலும், அது மிகவும் கடினமான ஒன்று’’ என்றார். ஓய்வு பெறும் உறுப்பினர்கள் அனைவரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
