* குல்தீப் யாதவுக்கு இன்று திருமணம்
முசூரி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இவர், தனது குழந்தைப்பருவ தோழி வன்ஷிகா சதாவை, உத்தரகாண்ட் மாநிலம், முசூரியில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் திருமணம் செய்ய உள்ளார். திருமணத்துக்கு முந்தைய மெஹந்தி, ஹல்தி உள்ளிட்ட கொண்டாட்டங்கள் சவாய் ஹோட்டலில் நேற்று நடந்தன. திருமணம் முடிந்த பின், வரும் 17ம் தேதி லக்னோவில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
* ஈட்டியெறிதல் போட்டி சுமித்துக்கு தங்கம்
புதுடெல்லி: உலக பாரா தடகள போட்டிகள் புதுடெல்லியில் நடந்து வருகின்றன. இதில், ஈட்டியெறிதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் சுமித் அன்டில், 69.25 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் 56.91 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து வெள்ளிப்பதக்கமும், பூனம் ராம் 49.48 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். சுமித் அன்டில், 2020ல் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியிலும், 2024ல் பாரிசில் நடந்த பாராலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
* குஷால் தாஸ் காலமானார்
புதுடெல்லி: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (ஏஐஎப்எப்) முன்னாள் பொதுச் செயலாளர் குஷால் தாஸ் (66) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த 2017ல், இந்தியாவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதில் குஷால் தாஸ் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2010ல் ஏஐஎப்எப்பில் நிர்வாக பொறுப்பில் சேர்ந்த அவர், 12 ஆண்டுகள் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
