சென்னை: மக்களால் நீண்ட வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை ஒருவழியாக மார்ச் 15ம் தேதி தொடங்கும் என் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 17 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், நீதிமன்றத் தடை என பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில், மார்ச் 5-ம் தேதியில் 5 கி.மீ. தொலைவு கொண்ட இந்த ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் ரயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மார்ச் 10-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரயில் இயக்க அனுமதிச்சான்று கிடைக்கவில்லை. தண்டவாளத்தில் சில பணிகள் மேற்கொள்ளவேண்டும் என பரிசோதனைக்கு வந்த குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, பாதுகாப்பு ஆணையர் கூறியபடி மாற்றங்கள் செய்யப்பட்டதால் ரயில் சேவையை தொடங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதனை அடுத்து மார்ச் 15ம் தேதி வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
