×

கடலூரில் திமுகவால் தேமுதிகவுக்கு எழுச்சி

2011ல் சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உச்சத்தில் இருந்த தேமுதிக அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல்களில் செல்வாக்கை இழந்தது. தற்போது ஆளும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் மீண்டும் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சியினருக்கு துளிர்விட ஆரம்பித்துள்ளது. நடிகராக இருந்து கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேமுதிக என்ற கட்சியை துவக்கினார் விஜயகாந்த். தொடர்ந்து நடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலுள்ள 232 சட்டசபை தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை நிறுத்தினார். அந்த தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றார். ஒட்டுமொத்தமாக தேமுதிக 27 லட்சத்து 64 ஆயிரத்து 223 ஓட்டுகளைப் பெற்றது. இது 8.38 சதவீதம் ஆகும்.

2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்றது. கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளிலும் வென்றது. ஆனால் கடந்த, 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்த தேமுதிக கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒன்றில்கூட வெற்றிபெற முடியவில்லை.

கடந்த, 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் படுதோல்வியை தழுவியது. முதன்முதலாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட்டை இழந்தார். இந்நிலையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுகவுடன் தேமுதிக முதன்முறையாக இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதனால் மீண்டும் சட்டமன்றத்தில் தேமுதிக எம்எல்ஏக்கள் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Tags : Timughal Temuthiga ,Cuddalore ,Demutika ,2011 assembly elections ,Dima ,Akhattsians ,
× RELATED பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத...