பண்ருட்டி, மார்ச் 12: கடலூர் மாவட்டம் பண்ருட்டி சாமியார் தர்காவில் காசு வைத்து சூதாட்டம் விளையாடுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிலர் சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பண்ருட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்த சின்னதாஸ் (37), சாமியார் தர்காவை சேர்ந்த ராமச்சந்திரன் (37), அதே பகுதியை சேர்ந்த நூர் முகமது (32) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 52 புள்ளித்தாள்கள் மற்றும் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
