×

அதிகாரிகளாக நீங்கள் நாட்டை கவனிக்க வந்துவிட்டாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்: ஐஏஎஸ் தேர்வு வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: அதிகாரிகளாக நீங்கள் நாட்டை கவனிக்க வந்துவிட்டாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என ஐஏஎஸ் தேர்வு வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, விக்டோரியா பொது அரங்கத்தில் நடைபெற்ற அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு, ஆற்றிய உரை. அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் கடுமையான உழைப்பை கொடுத்து, அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய உங்கள் எல்லோருக்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்! நீங்கள் படைத்திருப்பது சாதாரண சாதனை இல்லை! இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே மிகவும் கடினமான தேர்வு என்று யுபிஎஸ்சி தேர்வைத்தான் சொல்வார்கள். தேர்வுக்கு தயாராகின்றவர்களின் மன வலிமையையும், டிசிப்ளினையும் சோதித்து பார்க்கக் கூடிய கடுமையான தேர்வு அந்த தேர்வு! அப்படிப்பட்ட தேர்வை, உங்களில் சிலர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சிப் பெற்றிருப்பீர்கள். சிலர் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வெற்றியடைந்திருப்பீர்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னால், என்ன நிலை இருந்தது என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

தமிழ்நாட்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றியடையும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துகொண்டே வந்தது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு, இதை கவனித்து, இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று அதற்கான பல்வேறு முயற்சிகளை நாம் எடுத்தோம். நான் முதல்வன் ஊக்கத்தொகை, உயர் பயிற்சி, நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளக்கூடிய சிறப்பு பயிற்சி என்று பல்வேறு முன்னெடுப்புகளை நம்முடைய அரசு எடுத்தது. நம்முடைய அரசு எடுத்த முயற்சிகளுக்கு, அண்மைக் காலமாக நல்ல பலன் கிடைத்துக் கொண்டு வருகிறது. இதற்காக உழைத்திருக்கக்கூடிய அதிகாரிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள்தான் அமைதியான ஹீரோக்கள். இந்த ஆண்டு 60 பேர் நம்முடைய மாநிலத்திலிருந்து தேர்வாகியிருக்கிறீர்கள். அதில், 56 பேர் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்தவர்கள் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி! என்னைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும். இங்கு வந்திருக்கக்கூடிய உங்களைப் பார்த்து ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு இன்னும் பல இளைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குச் சென்று, பல்வேறு மாவட்டங்களில், கலெக்டராக, பல்வேறு துறைகளில் செயலாளராக, நாட்டின் வளர்ச்சிக்கும் எளிய மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்.

ஏன், வெளிநாடுகளுக்கும் இந்திய தூதர்களாக சென்று, நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை நீங்கள் மேம்படுத்த வேண்டும். பொதுவாக, ஆட்சியாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை சந்தித்து மக்களின் நம்பிக்கையை நாங்கள் பெற வேண்டும். ஆனால், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றியடைந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., போன்ற பொறுப்புகளில் அமரும் உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு தேவை அமையவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ச்சியாக உங்கள் பணியை செய்யக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. இந்த வாய்ப்பு, உங்களை மேலும் பொறுப்புடையவர்களாக உயர்த்த வேண்டும். அடக்கத்தையும், மனிதநேயத்தையும் வளர்க்க வேண்டும்! அதிகாரிகள் என்றால், அலட்டலாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, சாதாரண மக்களிடம் கூட அன்பாக, பண்பாக நடந்துகொண்டால் அதுதான் உங்கள் பெயரை காலத்திற்கும் நிலைக்கச் செய்யும்! அப்படி, அன்பும், அடக்கமும், சமூகநீதி பார்வையும் அடிப்படையாக வைத்து இந்தியாவின் ஏற்றத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உழைப்பீர்கள். தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பான பெருமையைத் தேடித் தருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இனிமேல், உங்களின் வாழ்க்கை மிகவும் பிசியாக மாறிவிடும். என்னை சுற்றியிருக்கும் ஐஏஎஸ் ஆபீசர்ஸ் பாருங்கள்; ஆபீசர்சஸ் எல்லோரையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரெஸ்ட் என்பதே பெரும்பாலும் கிடையாது. அப்படிப்பட்ட கேரியர் தேர்ந்தெடுத்திருக்கும் உங்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் ஒரு அட்வைஸ் தர நினைப்பது, அதிகாரிகளாக நீங்கள் நாட்டை கவனிக்க வந்துவிட்டாலும், உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உங்கள் அப்பா-அம்மாவிற்கு உங்களுக்கு வாழ்க்கை துணை , குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் ஒரு 5 நிமிடம் அட்லீஸ்ட் ஒரு ஃபோன்-ஆவது செய்து “சாப்பிட்டீர்களா? மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டீர்களா?” என்பதை நீங்கள் அக்கறையுடன் கேட்க வேண்டும். இந்த அக்கறையும், அன்பும்தான் உங்கள் கேரியர் முன்னேற்றத்தில் பெரிய துணையாக இருக்கும். இப்போது, உங்கள் கனவு நிறைவேறிவிட்டது! இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற இன்றிலிருந்து நீங்கள் புறப்படுங்கள்.
வாழ்த்துக்கள்.உங்களைப் போல இன்னும் பலரை நம்முடைய திராவிட மாடல் அரசு உருவாக்குவதற்கு தொடர்ந்து துணைநிற்கும்! இந்த நேரத்தில், முக்கியமாக இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த சுதாகரனுக்கு என்னுடைய சிறப்பான பாராட்டு, வாழ்த்து. இவ்வாறு உரையாற்றினார்.

 

Tags : Chief Minister ,MK Stalin ,IAS ,Chennai ,Tamil Nadu ,
× RELATED சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரிப்பு;...