×

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு!

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 131 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடி 89 ரன்கள் மற்றும் அபிஷேக் சர்மாவின் மின்னல் வேக 52 ரன்களின் உதவியுடன் 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலுக்கு முன்னால் நிலைகுலைந்தது. ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக் குழுவினருக்கு பிசிசிஐ வாழ்த்து தெரிவித்து, பரிசு தொகையையும் அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“இது வெறும் வெற்றி மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் ஆதிக்கத்திற்கான சான்று. வீரர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில் ரூ. 131 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது பிசிசிஐ ரூ. 125 கோடி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அந்தத் தொகை 6 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 131 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : T20 World Cup ,BCCI ,Ahmedabad ,Cricket Control Board of India ,New Zealand ,2026 T20 World Cup Series ,Narendra Modi ,
× RELATED கடும் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக...