×

குண்டுவீச்சில் தந்தை கமேனி கொல்லப்பட்டதால் மகன் நியமனம்; ஈரான் புதிய உச்ச தலைவர் தேர்வுக்கு டிரம்ப் எதிர்ப்பு

 

டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி முறைப்படி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் அவரது தேர்வுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், போர் தீவிரமடையுமா? குறையுமா? என்பது கேள்வியாக உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், கடந்த பிப். 28ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தின. இந்த அதிரடி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஈரானின் அடுத்த தலைமை குறித்த கேள்வி எழுந்தது. இந்த சூழலில், மறைந்த அலி கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி (59), ஈரானின் 3வது உச்ச தலைவராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரானில் கடந்த 1979ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு, தந்தை வழி வாரிசாக ஒருவர் தலைமை பொறுப்பிற்கு வருவது இதுவே முதல் முறையாகும். தற்போது 10வது நாளை எட்டியுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான நேரடி போருக்கு இடையே, ஆன்லைன் வாயிலாக கூடிய நிபுணர்கள் குழு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனிக்கு ராணுவம் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், ‘ஈரானின் புதிய தலைவராக யாரை நியமித்தாலும், அதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் இருக்க வேண்டும். எங்களது அங்கீகாரம் இல்லாமல் பதவியேற்பவர் நீண்ட காலம் நீடிக்க முடியாது. வாரிசு அடிப்படையில் மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டுள்ளதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த நியமனம் செல்லுபடியாகாது’ என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா இவ்வாறு பகிரங்கமாகத் தலையிடுவது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து ஈரான் தரப்பில் கூறுகையில், ‘எங்கள் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஈரானிய மக்களுக்கு மட்டுமே உள்ளது.

இதில் அமெரிக்கா தலையிட எந்த அதிகாரமும் இல்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் புதிய தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்றால், அவர் தனது தந்தையை விடவும் தீவிரமான கொள்கைகளைக் கொண்டிருப்பார் என்றும், இதனால் போர் இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது ஈரானின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது அமெரிக்காவின் எப்-35 போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருவதால், அங்குள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும் தனது தந்தை, தாய் மற்றும் மனைவியை வான்வழி தாக்குதலில் இழந்த மொஜ்தபா கமேனி, இனி வரும் நாட்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் தீவிர முன்யோசனை திட்டமிடல் கொள்கையை கடைபிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : Khamenei ,Trump ,Iran ,Tehran ,Mojtaba Khamenei ,United States ,Middle East region ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக Work From Home...