×

அமெரிக்கா-இஸ்ரேல் கடும் தாக்குதல் ஈரான் எண்ணெய் கிடங்கு மீது குண்டுவீச்சு; 1.95 கோடி லிட்டர் எரிவாயு தீப்பற்றி எரிகிறது: ‘பிளாக் அலர்ட்’ விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த 28 ம் தேதி ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, யுஏஇ, சவுதி, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான் மீது நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் இதுவரை 1,300 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன், தனது வளைகுடா அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய போதிலும்,பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்-இ-ரே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வழி தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் வெடித்து சிதறி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. வானுயரத்திற்கு எழும்பிய நெருப்பு பிழம்புகளும், கரும் புகையும் தலைநகரின் தெற்கு பகுதி முழுவதையும் சூழ்ந்தன.

இந்த விபத்தில் சுமார் 1 கோடியே 95 லட்சம் லிட்டர் எரிபொருள் தீயில் எரிந்து நாசமானது. இதில் தொழிலாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சுத்திகரிப்பு நிலையமானது ஈரானின் ஒட்டுமொத்த தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வில் 6 சதவீதம் ஆகும். இந்த தாக்குதலால் டெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் மாகாணங்களில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கிடங்கில் பற்றிய தீயை அணைக்க பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்ட போதிலும், பெட்ரோலிய பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

டெஹ்ரானிலும் அதற்கு அருகிலும் உள்ள 3 எண்ணெய் கிடங்குகளை குறி வைத்து தாக்குதல் நடந்தன. ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் கிடங்குகளின் மீது நடந்த தாக்குதல்களில் 4 டிரைவர்கள் பலியாகினர். ஆனால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு இல்லை. எண்ணெய் கிடங்குகளில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவ தரப்பில் , ‘ஈரான் ராணுவ கட்டமைப்பிற்கு உதவும் எரிபொருள் கிடங்குகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் ஐபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. இந்த போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 92.40 டாலராக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட ஈரான் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தியுள்ள இந்த தாக்குதல் ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். இது தலைநகரின் முக்கிய எரிசக்தி மையத்தை சிதைக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது’ என்றார். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கரும் புகையால் டெஹ்ரான் சுற்றுச்சூழல் துறை ‘பிளாக் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. டெஹ்ரான் நகரை கரும்புகை சூழ்ந்துள்ளது.

ஈரானின் கேஷம் தீவில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய ஈரான் கூறியுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி கூறுகையில், இந்த தாக்குதலால் ஒரு அப்பட்டமான, அவநம்பிக்கையான குற்றத்தை அமெரிக்கா செய்துள்ளது. இதனால் சுமார் 30 கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

புரட்சிகர காவல் படை சூளுரை: அமெரிக்கா,இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதல்கள் நேற்று 9ம் நாளை எட்டிய நிலையில் மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சொத்துக்களை குறி வைத்து ஏவுகணை, டிரோன் தாக்குதலை தீவிரப்படுத்த போவதாக ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.

* லெபனானில் பலி 400:
லெபனான்-சிரியா எல்லையில் உள்ள நபி சிட் மற்றும் கிரைபே நகரங்களில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் விமான படை வீரர்கள் புகுந்தனர். அப்போது லெபனான் வீரர்களுக்கும் இஸ்ரேல் படை வீரர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிசண்டை நடந்தது. இதில்,3 லெபனான் வீரர்கள் பலியாகினர். 41 பேர் பலியாகினர்.லெபனானில் கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 83 சிறுவர்கள் உள்பட 400 பேர் பலியானார்கள் என்று லெபனான் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்டின் மீது ஈரான் நேற்று டிரோன் தாக்குதல்களை நடத்தியது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நேற்று காலை முதல் தனது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் கிடங்கை பல ட்ரோன்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், எனினும், தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் 22 மாடி கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் இல்லை. ஐக்கிய அரபு எமிரேட், கத்தார் மீது தொடர்ச்சியாக நேற்று ஏவுகணைகள்,டிரோன்களை ஈரான் வீசியது. இதில்16 ஏவுகணைகள், 117 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டாக எமிரேட் தெரிவித்துள்ளது. கத்தார் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டன. அந்த ஏவுகணைகளை இடைமறித்து கத்தார் அழித்துள்ளது.

லெபனானுக்கு இஸ்ரேல் உத்தரவு : தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டின் சில பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

* ரகசிய தகவல்கள் ஈரானுக்கு பகிர்வா?
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படைகள் மற்றும் அதன் போர் உபகரணங்கள் குறித்த ரகசிய தகவல்களை ஈரானுக்கு ரஷ்யா பகிர்ந்துள்ளதாக வந்த செய்திகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்தார். மேலும் போர் அதிகரித்துள்ளதால் அத்தகைய தகவல்கள் ஈரானுக்கு உதவவில்லை என்று அவர் தெரிவித்தார்.

* அமெரிக்க வீரர்கள் சிறை?
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி வெளியிட்டுள்ள செய்தியில்,தற்போது நடந்து வரும் மோதலில் பல அமெரிக்க வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்றார். ஈரானின் புகாரை அமெரிக்கா மறுத்துள்ளது.

* கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மீது தாக்குதல்
ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் எங்கள் அண்டை நாடுகளை தாக்கியதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருந்தால் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தாது என்று தெரிவித்திருந்தார். அவர் பேசி 24 மணிநேரத்திற்குள் நேற்று, பஹ்ரைனில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பொருட்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என பஹ்ரைன் தெரிவித்தது.

* அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
இதற்கிடையே,நார்வேயில் அமெரிக்க தூதரகம் அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அமெரிக்க தூதரகத்திற்கு மிக அருகில் சக்தி வாய்ந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மத்திய கிழக்கில் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனுடன் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை இப்போதே கூற முடியாது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

* அமில மழை அபாயம்
டெஹ்ரானில் காற்றின் தரம் 400 புள்ளிகளை கடந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளதால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான எரிபொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து வெளியாகும் நச்சு ரசாயனங்களில் ஏற்படும் கரும்புகை வளிமண்டலத்தில் கலந்து அமில மழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் இந்த ரசாயனங்கள் உடலில் தீக்காயங்கள், கடுமையான சுவாச பிரச்னைகளை உருவாக்கும் என்று செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : US ,Israel ,Iran ,Tehran ,Supreme Leader ,Ayatollah Ali Khamenei ,UAE ,Saudi ,Qatar ,Bahrain ,Kuwait ,
× RELATED பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.321