×

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி; வளைகுடா போரால் ஒரு மாதத்துக்கு சலுகை: மோடி அனைத்தையும் அடகு வைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், வளைகுடா பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வர முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவின் எண்ணெயை வாங்குவதற்கு 30நாட்களுக்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வர்த்தக உடன்பாடு முதல் கச்சா எண்ணெய் வரை அனைத்தையும் மோடி அடகு வைத்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா எண்ணெய்யை வாங்குவதற்காக 25 சதவீத பரஸ்பர வரியை தவிர இந்தியா மீது 25சதவீத அபராத வரியை விதித்திருந்தார். இந்தியாவின் கொள்முதல் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை தூண்டுவதற்கு உதவுவதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து இந்திய கொள்முதல் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதலை குறைக்கத் தொடங்கின. இதன் எதிரொலியாக கடந்த மாதம் அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தகம் தொடர்பான இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனையடுத்து இந்தியா மீதான வரிகளை 18சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்மோஸ் நீரிணை பகுதியை கப்பல்கள் கடக்க ஈரான் தடைவிதித்துள்ளது. அந்த வழியாக சென்ற பல எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.

இதன் எதிரொலியாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு இந்தியாவிற்கு தற்காலிகமாக 30 நாட்கள் அனுமதி அளிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத் துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிபர் டிரம்பின் நிகழ்ச்சி திட்டங்களின் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த அளவை எட்டியுள்ளது.

உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் தொடருவதற்கு உதவும் வகையில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு தற்காலிகமாக 30 நாட்கள் அனுமதி அளிக்கிறது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் அல்லது பெட்ரோலிய பொருட்களை இந்தியா வாங்குவதற்கு மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி நள்ளிரவு 12மணி வரை அங்கீகரிக்கப்படும். இந்த குறுகிய கால நடவடிக்கை ரஷ்ய அரசிற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது.

ஏனெனில் இது ஏற்கனவே கடலில் சிக்கி தவிக்கும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை மட்டுமே அங்கீகரிக்கிறது. இந்தியா அமெரிக்காவின் ஒரு அத்தியாவசிய கூட்டாளி. மேலும் இந்தியா அமெரிக்காவிடம் எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம். இந்த இடைக்கால நடவடிக்கையானது உலகளாவிய எரிசக்தியை முடக்கி வைத்திருப்பதற்காக ஈரானின் முயற்சியால் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும்\\” என்று தெரிவித்துள்ளார். டிரம்ப் அரசின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அனுமதி கொடுப்பதற்கு அமெரிக்கா யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கார்கே கண்டனம்: அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தொடர்பாக ஒன்றிய அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே தனது சமூக வலைதள பதிவில், ‘‘எப்ஸ்டின் பைல்ஸ் மற்றும் அதானி வழக்கில் பிரதமர் மோடி மிரட்டப்படுகிறார் என்பதால் இந்தியாவின் மூலோபாய சுயாட்சி மற்றும் தேசிய இறையாண்மை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.

30 நாட்களுக்கு ஒரு விலக்கு என்ற முறையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி வழங்குவதாக அமெரிக்காவின் அறிவிப்பு மோடி அரசு தொடர்ந்து ராஜதந்திர இடத்தை விட்டுக்கொடுக்கின்றது என்பதை தெளிவாக காட்டுகின்றது. வர்த்தக உடன்பாடு முதல் கச்சா எண்ணெய் வரை அனைத்தையும் மோடி அடகு வைத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ இன்று நாம் பார்ப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அல்ல.

இது ஒரு சமரசம் செய்யப்பட்ட தனிநபரின் சுரண்டலின் விளைவாகும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘டிரம்பின் புதிய விளையாட்டு: டெல்லியில் உள்ள தனது நண்பரிடம் புடினிடம் இருந்து நீங்கள் எண்ணெய் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். இந்த அமெரிக்காவின் மிரட்டல் எத்தனை காலம் தொடரும்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மோடிக்கு கம்யூ. கடிதம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சந்தோஷ்குமார் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த கடிதத்தில், ‘‘சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா தனது மூலோபாய முன்னுரிமைகளை உறுதியாக பின்பற்றுவதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களுடன் தன்னை இணைத்துக்கொள்வது அதிகரித்து வருகின்றது. யவர்களாக இருந்தனர். ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளிப்பதாக அறிவித்தது இறையாண்மை கொண்ட இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது. இந்தியாஅதன் அடிப்படையான அணிசேரா கொள்கைகளில் இருந்து விலகிச் செல்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

* மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி : பாஜ
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவின் எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்க விலக்கு அளித்துள்ளது பிரதமர் மோடியின் மூலோபாய எண்ணெய் ராஜதந்திரத்தின் வெற்றியாகும் என பாஜ தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா மூலோபாய நிதானத்துடனும் மூலோபாய தெளிவுடனும் செயல்படுவதை ராகுல்காந்தியும் காங்கிரசும் வெறுக்கின்றது.

எண்ணெய் பற்றாக்குறை குறித்த போலி செய்திகளை பரப்புவதன் மூலம் பீதியை ஏற்படுத்த விரும்பிய காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல்காந்திக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாகும் ” என்று தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் கீழ் இந்தியாவின் மூலோபாய எண்ணெய் ராஜதந்திரம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

Tags : US ,India ,Russia ,Gulf War ,Modi ,New Delhi ,Israel ,United States ,Iran ,Gulf region ,
× RELATED கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்...