×

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030க்குள் 7 லட்சம் வீடுகள்: மாவட்டம்தோறும் நவீன தொழில்பூங்கா, அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வரும் 2030ம் ஆண்டிற்குள் 7 லட்சம் வீடுகள் கட்டப்படும். மாவட்டம்தோறும் நவீன தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கான அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 துறைகளின் அறிவிப்புகளை சென்னையில் நேற்று நடந்த ‘கனவுகள் மெய்ப்படும்’ என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டு மக்களின் கனவுகள் அனைத்தும் 2030ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ‘கனவுகள் மெய்ப்படும்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் துறை வாரியாக அரசின் சாதனைகளை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், மிகமிக முக்கியமான நாளாக இந்த மார்ச் 6 அமையப் போகிறது.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இன்றைய நிகழ்ச்சி போல என்றைக்கும் நடந்திருக்காது. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமல்ல, எதிர்கால தமிழ்நாட்டையும் மனதில் வைத்து, இந்த “தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறோம். கடந்த ஐந்தாண்டுகளில், திராவிட மாடல் அரசு, ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆற்றிய மகத்தான பணிகளை, அளப்பரிய சாதனைகளை சுருக்கமாக, ஆனால், மிகத்தெளிவாக, இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து அமைச்சர் சிலர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இன்னும் சில அமைச்சர்களும் பேசுவதற்கு நேரம் இடம் கொடுக்கவில்லை. நாம் அவ்வளவு காரியங்களை நிறைய செய்திருக்கிறோம். எல்லாவற்றையும் இந்த நிகழ்ச்சியில் சொல்ல முடியாத அளவுக்கு மலையளவு சாதனைகளை வைத்திருக்கிறோம். ஒவ்வொரு துறையிலும் அமைச்சர் துறையின் அதிகாரிகள், கடைநிலை அரசு ஊழியர்கள் வரை அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, அதன் பயன்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காட்டி வரும் அர்ப்பணிப்பு உணர்வும்.

அயராத உழைப்பும், நிர்வாகத் திறனும், தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கி உயர்த்தியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சிதான், நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம். சொன்னதை மட்டுமல்ல. சொல்லாத பல முத்திரை திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம். ஆட்சிக்கு வரும்போது, இவ்வளவு திட்டங்களை நம்மால் நிறைவேற்ற முடியுமா என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. ஆனாலும், அத்தனைத் திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்ற கனவும் எனக்கு இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளுக்கான என்னுடைய கனவுகளில் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது என்று இந்த நிகழ்ச்சி மூலமாக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் ஆட்சியில் செய்த திட்டங்களில் எந்த திட்டம் சிறப்பானது என்று என்னைக் கேட்டால், அனைத்துத் திட்டங்களும் சிறப்பானதுதான் என்று சொல்வேன். ஏனென்றால், ஒவ்வொரு திட்டத்தையும் தேவைக்கேற்ப மக்களுக்காக யோசித்து, திட்டம் தீட்டி, அவர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு எவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறோம். அதில் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறோம்.

அதனால் தான், நான் அடிக்கடி சொல்வேன். நம்முடைய திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு தரப்புக்கும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறோம். திட்டங்களால் பயனடைந்தவர்களின் பட்டியல் பெரிய புத்தகமே என்னிடம் இருக்கிறது. அதையெல்லாம் சொன்னால், இந்த ஒரு நாள் போதாது. இந்த திட்டங்கள் எல்லாம் போதுமா என்று என்னிடம் கேட்டால், போதாது. இன்னும் நிறைய சாதனைகளை செய்திருக்க வேண்டும். செய்திருக்கலாம்.

அரசியல் ரீதியாக சில நெருக்கடிகள். நிதி நெருக்கடிகள். இப்படி நிறைய முட்டுக்கட்டைகள். அதற்காக, இந்த காரணங்களைச் சொல்லி, தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைப்பவன் இல்லை இந்த ஸ்டாலின். அடுத்த 5 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும். நாம் எந்த பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்று ஒரு ப்ளூ பிரெண்ட் தயாரிக்க திட்டமிட்டோம். தமிழ்நாட்டின் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாக சென்று, அவர்களின் கனவுகளை, அவர்கள் தேவைகளை, அவர்கள் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தோம்.

மக்கள் சொன்ன கருத்துகளை அடிப்படையாக வைத்து, அதில் முக்கியமானவற்றை எல்லாம் முன்னுரிமைப்படுத்தி, தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான எனது தொலைநோக்குப் பார்வை, “தமிழ்நாடு 2030” – 14 முக்கிய அம்சங்களை என் மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். வீட்டு வசதித் துறை: 2030ம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் ஐந்து லட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் இரண்டு லட்சம் வீடுகளும் கட்டி, தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் கைகளிலும் சாவியை ஒப்படைப்போம்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை கண்டறிய ஆரம்ப நிலையிலேயே சிறப்பு முகாம்கள். தாய் சேய் நலனில் ஐஎம்ஆர் மற்றும் எம்எம்ஆர் குறைக்கும் தரவரிசையில் இந்தியாவிலேயே முதல் இடம்பெற சிறப்பு நடவடிக்கை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை: நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.

மண்வள அட்டைகள் 43 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டு, வேளாண்மைக்கு ஆதாரமான நீரைச் சேமிக்க நுண்ணீர்ப் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும். மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். உணவு உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டு, ஆயிரம் மதிப்பு கூட்டல் மையங்கள் நிறுவப்பட்டு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும்.

பள்ளிக்கல்வி துறை:. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2030-க்குள் நூறு விழுக்காடு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்படும். 300க்கும் மேற்பட்ட நூலகங்கள் நவீன அறிவுக் கோட்டைகளாக மலரும். முக்கியமாக, ஆயிரம் மாதிரிப் பள்ளிகள் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ மூலம் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு பள்ளியிலும், உடல்நலத்திற்காக விளையாட்டையும் – உளவியல் பாதுகாப்பையும் – வாழ்க்கைத் திறன் கல்வியையும் உறுதிப்படுத்துவோம்.

உயர்கல்வித் துறை: உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் மொத்த ஆளுமையை வளர்க்கும் மையங்கள். நான் முதல்வன் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, உலகளவில் நம் இளைஞர்கள் போட்டி போட வழிவகுக்கப்படும். 2030ம் ஆண்டிற்குள் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 90 விழுக்காட்டை எட்டும் வகையில், நிறுவன கட்டமைப்பு விரிவாக்கப்படும். ஆராய்ச்சியும், புதுமையும் செழிக்க மைய ஆய்வகங்களும், சிறப்பு மையங்கள் எனும் தொழிற்கல்வி சிறப்பு மையங்களும் நிறுவப்படும்.

செயற்கை நுண்ணறிவு, கல்வியுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஏஐ ஆய்வகம் உருவாகும். பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் வேர்விட்டு, நம் மாணவர்கள் உலக அரங்கில் போட்டியிடுவதற்கு வழி வகுக்கப்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள், உலகளாவிய வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், விளையாட்டு திறன்மிகு மாணவர்களுக்கு, ‘Flexible’ பாடத்திட்டம் மூலம் ‘அகாடெமிக் கிரெடிட்ஸ்’ வழங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை: நல்லிணக்கத்தின் அடையாளம், வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு ஜவுளி, தோல் ஆடை, கைவினை, கணினி தொழிற்பயிற்சி போன்ற துறைகளில், பயிற்சிகள் வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு, கல்வியின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும். சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில், திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

அமைச்சர் மெய்யநாதன் கேட்டதுபோல, தேவைப்படும் இடங்களில், ‘சமூகநீதிக் கல்லூரி விடுதிகள்’ திறக்கப்படும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வணிகம் தொடங்க, நிறுவன கடன் வசதி அதிகரிக்கப்படும். சிறுபான்மை சமூகத்தினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர் நலத் துறை: 2030ம் ஆண்டுக்குள், வீட்டு மனையற்ற ஒவ்வொரு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பத்திற்கும் வீட்டு மனைப் பட்டா வழங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களிடையே பள்ளி இடைநிறுத்தம் இல்லாத நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். உண்டி உறைவிடப் பள்ளிகள் விரிவாக்கப்படும்.

12ம் வகுப்புக்குப் பின், உயர்கல்வி நுழைவு, தொழிற்கல்வி இணைப்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு என முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசு துணை நிற்கும். பெரும் வரவேற்பை பெற்றுள்ள, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களும் விரிவுபடுத்தப்படும்.

ஊரக வளர்ச்சி துறை: இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கிராம, நகர இடைவெளியை குறைப்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொன்னார். அவர் முன் வைத்த, கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில், கிராமங்கள் வளர்த்தெடுக்கப்படும்.

ஊராட்சிகளில் வருவாய் ஈட்டும் உற்பத்தித் திறன் கொண்ட நிலையான சொத்துகளை உருவாக்குவதை முன்னுரிமையாக கொண்டு கிராம சந்தைகள், விளையாட்டு மற்றும் நல்வாழ்வு உட்கட்டமைப்புகள், கிராமப்புற நீர்நிலைகளை செம்மைப்படுத்தி காத்தல், கிராமங்களை பசுமையாக்குதல், வேளாண் சாராத கிராமப்புற வேலைவாய்ப்பினை வழங்குதல், குறைந்த அரசு செலவில், அதிக பயன் பெறுதல் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கத்தை அடைய, ஒரு உன்னதமான திட்டம் உருவாக்கப்படும்.

அதற்கு, உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் என பெயரிடப்படும். காந்தியடிகள் பெயர் நீக்கப்பட்டு வரக்கூடிய இந்த காலகட்டத்தில், அவரின் பெயரை நம்முடைய மாதிரி கிராமங்கள் திட்டத்திற்கு சூட்டியிருக்கிறோம். இதன் முதற்கட்டமாக – பத்து ஊராட்சிகளில், இந்த திட்டம் இப்போதே செயல்படுத்தப்படும்.

தொழில்துறை: தமிழ்நாடு, இந்தியாவின் பொருளாதார வல்லரசாக இருக்கிறது. அதற்கு எங்களுடைய இலக்கு, 18 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பிடிக்கும். மேக் இன் தமிழ்நாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் உயிர் பெற, மாவட்டந்தோறும் நவீன தொழிற்பூங்கா, ஒரு சிறப்பு தொழில் தொகுப்பு, பொது வசதி மையம் ஆகியவை அமைக்கப்படும், மின்னணுவியல் துறையில், மதிப்புக் கூட்டல் ஐந்து மடங்காக அதிகரிக்கப்படும்.

ஐடி ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியிலிருந்து 6 லட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும். ஐ.டி. துறையில் மட்டும் இரண்டு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளித் தொழிலும், நவீனமயமாக்கப்பட்டு, திருப்பூர்-கரூரில் 35 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும். தமிழ் மொழிக்கென்றே ஒரு லார்ஜ் லாங்குவேஜ் மாடல் (Large Language Model) உருவாக்கப்படும்.

கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை: 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். மீனவ மகளிருக்காக, கடல்பாசி சாகுபடியை 15 ஆயிரம் டன்னிலிருந்து 30 ஆயிரம் டன்னாக வளர்ப்போம். உள்நாட்டு மீன் உற்பத்தியை 2.67 லட்சம் டன்னிலிருந்து 4.50 லட்சம் டன்னாக உயர்த்துவோம். மீன் விதை உற்பத்தியை 100 கோடியிலிருந்து 200 கோடியாக இரட்டிப்பாக்கி, புதிய அரசு மீன் பண்ணைகளை நிறுவுவோம்.

கால்நடை எண்ணிக்கையை 2030ம் ஆண்டிற்குள் 3 கோடியாக உயர்த்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவோம். தீவனப் பஞ்சம், இனி தமிழ்நாட்டில் இல்லை என ஒரு லட்சம் ஏக்கரில் தீவனப் பயிர்ச்சாகுபடி செய்யப்படும். தற்போது தினமும் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டை, 2030க்குள் 4.50 கோடி லிட்டராக உயர்த்தும் இலக்கோடு முன்னேறுவோம்.

நகராட்சி நிர்வாகத் துறை: நடைபாதை, பச்சை மரங்கள் என எழிலான சாலைகள் நகரங்களில் உருவாக்கப்படும்.  2030ம் ஆண்டில், தமிழ்நாட்டின் நகர்ப்பகுதியில், 20 விழுக்காடு பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் முழுமையாக சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, 30 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்படும்.

திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் செய்யப்படும். 2030ம் ஆண்டில், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முழுமையான மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, நகர்ப்புற நிலங்களில் குறைந்தது 3 விழுக்காடு ஸ்பாஞ்ச் சிட்டி உட்கட்டமைப்பாக மாற்றப்படும். சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை: 40 லட்சத்து 56 ஆயிரம் பதிவுபெற்ற எம்எஸ்எம்இ நிறுவனங்களுடன் நம் நாட்டில் 3ம் இடம் வகிக்கும் தமிழ்நாடு வரும் 2030ம் ஆண்டில் முதலிடத்தை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2030ம் ஆண்டில், இந்தத் துறை சார்பாக ஐந்து சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும்.

குறிப்பாக, உணவு பதப்படுத்துதல், தேங்காய் நார் உற்பத்திப் பொருட்கள் போன்ற வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளில், நம்முடைய எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பங்கேற்பதற்கு வழிவகைகள் செய்யப்படும்.

நெடுஞ்சாலைத் துறை: நவீன சாலை தொழில்நுட்பம், ஏஐ கண்காணிப்பு, அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகள் ஆகியவற்றால் நம் பாலங்கள், சாலைகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். கோயில் நகரங்களுக்கும், கடலோர சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட்டு, உலக சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் தரத்தில் அமைக்கப்படும்.

கைத்தறி மற்றும் ஜவுளி துறை: ஜிஐ பதிவு பெற்ற தமிழ்நாட்டின் கைத்தறி வகைகள் – தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் பெருமையுடன் காட்சிப்படுத்தப்படும். இது, உங்கள் கனவு. தமிழ்நாட்டு மக்களின் கனவு. இது அனைத்தும் செயல்வடிவம் பெற, மாவட்ட வாரியாக தனித்தனி செயல் திட்டங்கள் வகுக்கப்படும் என்று இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கின்ற உறுதி மொழி.

இதையெல்லாம் நனவாக்கி, 2030ம் ஆண்டில், தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவோம்.  எனவே, நாங்கள்தான் மீண்டும் வருவோம். மீண்டும் மீண்டும் வெல்வோம். தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

* திமுக ஆட்சியில் 11.9 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது – அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
திமுக ஆட்சியில் 11.9 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்றுள்ளது. 2016-21 ஆண்டுகளில் 4 சிப்காட் பூங்காக்கள் மட்டுமே தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 33 சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் 8 டைடல் பார்க், டைடல் நியோ பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறினார்.

Tags : Districtwide Modern WorkPunga ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Artist ,Tamil Nadu ,
× RELATED திருச்சி திமுக மாநாட்டுக்கு அழைப்பு...