ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 114 (பகவத்கீதை உரை)
கிருஷ்ணன் களைப்படையவில்லை. உபதேசம் செய்வதில் தொய்வு காட்டவில்லை. தான் சொன்னவற்றை அர்ஜுனன் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறான், அதைவிட, எத்தனை தூரம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அனுமானித்து, அதனாலேயே ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அர்ஜுனனின் புலன்கள் அவனைவிட்டு விலகி எங்கோ தொலைவில் இருக்கின்றன போலும்! அவன் கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறானே தவிர, அவர் சொன்னது மனசுக்குள் இறங்கியதா, மூளைக்குள் புகுந்ததா என்பது அவனே அறியாத மர்மம். அவனுடைய நிலையை கிருஷ்ணன் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார். அவனுடைய கண்கள் தன் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், கவனமெல்லாம் அந்தப் போரை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்ற ஆரம்ப கட்ட சிந்தனையிலேயே லயித்திருந்தது போலிருக்கிறது. அதைப் புரிந்து கொண்டதால்தான் ஒரே கருத்து, வெவ்வேறு வார்த்தைகள், வெவ்வேறு தொனிகள் என்று அவர் முயற்சிக்கிறார்.
‘‘நான் சொல்றது கேட்குதா?” என்று சிலசமயம் நாம் நம் பேச்சைக் கேட்பவரிடம் உறுதி செய்து கொள்கிறோம். நம் கண்களை நேருக்கு நேர் பார்க்காமலும், அங்கும் இங்குமாகப் பார்வையை அலைய விடுவதுமான மேனரிசத்தில் நம் பேச்சு அவரை எட்டவில்லை என்பது நமக்குப் புரிந்து விடுகிறது. ஆகவே நாம் பேசும் கருத்தின் பரிமாணத்தை ஒட்டி, மேலும் அதை வலியுறுத்துவது தேவைதானா என்று நமக்கு அலுப்புத் தட்டி விடுகிறது. ‘‘டேய், எங்க பராக்கு பார்த்துக் கொண்டிருக்கறே? நான் சொன்னதைக் கேட்டாயா?” என்று நாம் சற்றே கோபத்துடன் வினவுகிறோம்.
‘‘ஆங், கேட்டுது, கேட்டுது,” என்று எதிரே இருப்பவர் சமாளிக்கவோ, நம்மைத் தவிர்க்கவோ முயற்சிக்கும்போது, விடாக்கண்டரான நாம், ‘‘எங்கே, நான் சொன்னதைத் திருப்பிச் சொல்லு?” என்று கேட்டு அவரை மேலும் தர்மசங்கடப் படுத்துகிறோம்!பொது விஷயங்கள் எப்படி இருந்தாலும், கேட்பதில் அலட்சியக் குறைபாடு இருந்தாலும், அதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆனால் போர் என்று வரும்போது, அதுவே தர்மத்தின் ‘தலையெழுத்தை’ நிர்ணயிக்கப் போகிறது என்று வரும்போது, திரும்பத் திரும்பக் கூறுதல் என்பது மிகவும் அவசியமாகிறது. அதைத்தான் கிருஷ்ணன் செய்து கொண்டிருக்கிறார்.
ஸங்கபப்ரவான்காமான் ஸ்த்யக்த்வா ஸர்வானசேஷத
மனஸைவேந்த்ரியக்ராமம் வினியம்ய ஸமந்தஹ (6:24)
சனை சனைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா
ஆத்மஸம்ஸ்ருதம் மன க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் (6:25)
‘‘துக்கத்திலிருந்து விலகி வா. அதுவே யோகம். சலனமில்லாத மனதுடன், உறுதியாக, தொடர்ந்து அந்த யோகத்தை பயில்வாயாக.”‘‘உறுதியான அறிவாலும், ஆத்மாவின் மீது நிலைநாட்டப்பட்ட மனதாலும், கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெறுவாயாக. வேறு எதையும் நினைவில் கொள்ளா திருப்பாயாக.’’சங்கல்பத்தால் உருவாகும் அனைத்து இச்சைகளையும் முற்றிலுமாகத் துடைத்து தூர எறிந்துவிடுமாறு கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார்.
ஏனென்றால் ஆசை என்பது சிறு தீப்பொறி போல. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கட்டைகளுக்கிடையே எங்கேனும் அந்தப் பொறி தோன்றுமானால், அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மிகப் பெரிய தீயாகி அனைத்துக் கட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும். அந்தப் பொறியை அதன் ஆரம்பத்திலேயே மன உறுதி என்ற தண்ணீரால் அணைத்துவிட வேண்டும். ‘தீப்பொறி எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை;
ஆகவே எந்த பாதிப்பும் ஏற்படாது,‘ என்ற அலட்சியமோ, கவனக் குறைவோ, பெருந்தீக்கு வழி காட்டிவிடும். தீர ஆராய்ந்து கட்டைகளை முற்றிலுமாகப் பிரித்துப் போட்டு, தீக்கான வாய்ப்பே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மறுபடி கட்டைகளை அடுக்கி வைக்கலாம். இந்த சிரமத்திற்கு சோம்பற்பட்டால், நம்மை நம் கண்ணே ஏமாற்றிவிடும்; பேரிழப்பில் கொண்டுவிடும்!
புகையும், கரியும் மண்டிக் கிடக்கும் ஓர் அறைக்குள் ஒருவன் செல்ல வேண்டியிருந்தால், அவன் எவ்வளவுதான் எச்சரிக்கையுடன் இருந்தாலும், ஒரு சிறு தீற்றலாகவாவது கரி அவன் மீது படிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஒருவன் எத்தனைதான் முயற்சி செய்தாலும், அவனுடைய இந்திரியங்கள் ஏதேனும் ஒரு பலவீன கட்டத்தில் அவனை வீழ்த்திவிடும். அந்த பலவீனம் உருவாகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கரிப்பிடித்த அறைக்குள் போனால், தானே அறியாமல் தன் உடலில் கரி அழுக்கு படியக் கூடும் என்பதை உணர்ந்தால், அந்த அறைக்குள் போவதையே தவிர்க்கலாம், அல்லவா? அதாவது, தனக்குள்ளேயே நிரந்தரமாகக் குடி கொண்டிருக்கும் இந்திரியங்களை கண்காணிக்காமல் விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.
தன் வீட்டை, சொந்தக்காரர் வாடகைக்கு விட்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மாதா மாதம் வாடகைப் பணம் வந்து விடுகிறது என்பதால் அந்த வீட்டின் மீதான தன் உரிமையைப் பற்றி எண்ணாதிருக்க முடியுமா? தற்செயலாகப் போவதுபோல, அந்த வீட்டிற்குப் போய், வாடகைக்காரருடன் நட்பாகப் பேசுவது போல, அவர் வீட்டை எந்த அளவுக்குப் பராமரிக்கிறார் என்பதை கவனிப்பதில்லையா? தனக்குப் பிடிக்காதவகையில் ஏதேனும் குறை தெரிந்தால், அதை கண்டிப்பான குரலில் வாடகைக்காரரிடம் சொல்வதில்லையா?
கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள ஒரு ஜோக். ஒருவர் தெரு சாக்கடை ஓரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவருடைய நண்பர், ‘‘என்ன சார், தேடறீங்க? எதைத் தொலைச்சீங்க?’’ என்று கேட்டார்.‘‘எதையும் தொலைக்கலே சார், வீட்டு சொந்தக்காரர் வீட்டை காலி பண்ணச் சொல்றார். எனக்கு அந்த வீட்டை வாடகைக்கு விட்டபோது, ‘நீங்கள் இந்த வீட்டை காலி பண்ணும்போது, நான் எப்படி உங்க கிட்ட வீட்டைக் கொடுத்தேனோ அதேபோல இருக்க வேண்டும்,’ என்று உறுதியாகச் சொன்னார். அதனால்தான் முப்பது கரப்பான் பூச்சி, பத்துப் பதினைந்து மூட்டைப்பூச்சி, ஏழெட்டு எலிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இவற்றோடுதானே அவர் எனக்கு வீட்டை வாடகைக்கு விட்டார்!’’ என்று அவர் பதில் சொன்னார்.
இது ஏற்கெனவே முறையாகப் பராமரிக்காத வீடு மற்றும் அதன் சொந்தக்காரரைப் பற்றிய ஒரு ஜோக். வாடகை வீடோ, சொந்த வீடோ, நாம் அதில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், அதை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்தானே? அதுபோல நம் உடல் என்னும் வீட்டில் கரப்பான் பூச்சிகளாக, பல்லிகளாக, எலிகளாக, கரையான்களாக நம் புலன்களை செயல்படுத்த விட்டோமானால் நாம் அரித்துப் போய்விட மாட்டோமா?
மன உறுதி அத்தனை அவசியமானது. புத்திசாலிகளாக இருக்கலாம், வல்லவர்களாக இருக்கலாம். அவரவர் தத்தமது துறைகளில் தம் ஆற்றல் காரணமாக சிறந்து விளங்கலாம். ஆனால் அவர்களுக்கும் இந்திரியங்களை அடக்க இயலாத பலவீனர்களால் என்ன லாபம்? ‘ஊசிப்புல்லின் நுனி கூர்மையானதுதான்; ஆனால் அதனால் துணி தைக்க முடியுமா? அதன் இரு புறங்களும் கூர்மையானதுதான்; ஆனால் அதனால் காய் வெட்ட முடியுமா?’ என்று கேட்கிறார் சுவாமி சித்பவானந்தர். அதாவது ஆசையை அடக்கும் வல்லமை, மன உறுதி படைத்தவருக்கே சாத்தியம் என்பது அவருடைய கருத்தின் உள்ளீடு.
‘‘மனம்தான் எல்லாம். அது தன் சுயத்தை இழக்குமானால், நீயும் உன் சுயத்தை இழப்பாய். மனம் உறுதியானதாக, பலவீனங்களுக்கு ஆட்படாததாக இருக்குமானால், உன்னாலும் உன் சுயத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். சுத்தமான ஒரு துணியை எந்தச் சாயத்திலும் தோய்த்தெடுத்து அந்த வண்ணத்திற்கு அதை மாற்ற முடியும். ஆங்கிலம் கற்ற ஒருவரால் தன் தாய்மொழி உரையாடலின்போது ஆங்கில வார்த்தையைத் தவிர்க்கவே முடியாததுபோல!
சம்ஸ்கிருதம் பயின்ற ஒரு பண்டிதன், தன் பேச்சினூடே பொருத்தமான ஸ்லோகங்களைக் குறிப்பிடுவதுபோல! அதேசமயம், தீயவர்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவன் தன்னுடைய எந்த உரையாடலிலும் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டான்! ஆங்கிலம் பயில்வதுபோல, சம்ஸ்கிருதம் கற்பதுபோல மேன்மையான நோக்கில் மனதைத் திருப்பினால் அது தானாக மேன்மையாகிவிடும். ஆத்மார்த்த பக்தர்களுக்கு மத்தியில் ஒருவன் புழங்கினானால், அவனுடைய மனம் ஈஸ்வர சிந்தையிலேயே ஆழ்ந்திருக்கும். அவனுடைய எண்ணமும், பேச்சும், செயலும் தெய்வீகமானதாகவே இருக்கும். சகவாசத்துக்கும், செய்கைக்கும் தக்கவாறு மாறுவதுதான் மனதின் சுபாவம்,’’ என்று விவரிக்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
ஒரு கருத்தை வலியுறுத்துவது என்பது அதை விவரிக்கும் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதுதான். இந்த உத்தியைத்தான் கிருஷ்ணன் கையாள்கிறார். ஆனால் ஒரே மாதிரியாகச் சொல்லாமல், கேட்பவரை சலிப்படைய வைக்காமல், வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு உதாரணங்களுடன் சொல்லி விளக்க முற்படுவதுதான் அந்த உத்தியின் கிளை. குறிப்பாக இந்த ஸ்லோகத்தில் ‘இடைவிடாத இறை சிந்தனை’ அவசியம் என்பதை நிலைநாட்ட முயற்சிக்கிறார் கிருஷ்ணன். ‘இறைவனை சிந்திப்பது எப்படி?’ என்பது பாமரனின் கேள்வியாக இருக்கிறது. அருவமான அந்த சக்தியை எப்படி உணர்வது, தொடர்ந்து சிந்திப்பது? கவலை வேண்டாம்; அந்த சிந்தனையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மனசு தெளிவு பெறுவது போலத் தோன்றுகிறதா, அதுதான் இறை சிந்தனையின் பலன். மனத் தெளிவு என்பது வேறெந்த எண்ணமும் இடையூறு செய்யாத வெற்றிடம்.
சிந்தனை என்பது என்ன? ஒன்றைத் தவிர பிறிதொன்று குறுக்கிடாமைதான். அது நம் அறிவுக்குப் புரிய வேண்டும். புரிந்து கொண்ட அறிவு, மனசை அடக்கி வைக்கும்; அதைச் சிதறிப் போகாதபடி காக்கும். குறிப்பிட்ட நபருக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறோம். மிகவும் முக்கியமான நபர், விஷயமும் முக்கியமானதே. ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிட்டாதபடி அடுத்தடுத்து வெவ்வேறு வேலைகள் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவற்றை விட்டு விலகி, மொபைல் ஃபோனை எடுக்கவே முடியவில்லை.
அந்த வேலைகளில் நாம் ஈடுபட்டிருப்போம்தான் என்றாலும், மனசுக்குள் தொலைபேச வேண்டிய உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். அப்போதைய வேலைகளில் எந்த பின்னமும் வந்துவிடக் கூடாதே என்ற அக்கறை, மன உந்துதலைக் கொஞ்சம் தள்ளி வைக்கும். கைவசம் இருந்த வேலைகள் முடிந்த பிறகு, நேரம் கிடைக்கிறது. ‘அப்பாடா!’ என்ற நிம்மதியுடன் கைகள் ஆவலுடன் மொபைல் ஃபோனைப் பற்றுகின்றன.
இந்த உந்துதல்தான் இறை சிந்தனை. இது அனைவருக்கும் பொதுவானது. அதாவது இறைவனை சிந்திப்பது என்பது மரபணுவில் ஊறி வருவது. அதை அறிவதும், அனுபவிப்பதும் அவரவர் மனப் பக்குவத்தைப் பொறுத்து அமைகிறது. ஹிரண்யகசிபு போல ஒரு மன்னன் இருந்தான். ‘நானே தலைவன், நானே சட்டம், நீதி எல்லாம்,’ என்று அறைகூவினான். தன் பார்வையாலேயே அனைவரையும் அடக்கி ஆண்டான். ஆனால் ஒரு சமயம் ஏற்பட்ட போரில் இவன் தோல்வியைத் தழுவ வேண்டியிருந்தது.
கைதியானான், ஒரு தீவில் சிறை வைக்கப்பட்டான். ஒருநாள் தீவினுள் நடந்து வந்த அவன், வயல் வரப்பின் மீது அமர்ந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்தான். ‘‘ஏய், எழுந்திரு, எனக்கு வழிவிடு,’’ என்று பழைய இறுமாப்பில் கட்டளை இட்டான். ‘‘யாரப்பா நீ? உனக்கு நான் எதற்காக வழி விடவேண்டும்? வரப்பிலிருந்து இறங்கி, என்னைச் சுற்றிக் கொண்டு போ,’’ என்று அந்தப் பெண் வெகு அலட்சியமாக பதிலளித்தாள்.
அவன் திடுக்கிட்டான். ‘ஒரு காலத்தில், நான் நடந்து வந்தேனென்றால், எனக்கு முன்னாலிருக்கும் மலையும் எனக்காக ஒதுங்கி வழிவிடும். இப்போது கேவலம் ஒரு பெண் என் உத்தரவை அவமதிக்கிறாள்,’ என்று மனசுக்குள் நொந்து கொண்டான், அந்த கைதி அரசன்!ஆணவம் மறைந்தால், ஆண்டவன் தெரிவான், அதாவது உணரப்படுவான். அந்த உணர்தலைத்தான் ஒரு யோகி தன் பயிற்சிகளால் அனுபவிக்கிறான்.
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்
