×

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.2732.77 கோடி செலவிலான 229 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.3.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 1404.27 கோடி ரூபாய் செலவில் 6 முடிவுற்ற பணிகளையும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 529.54 கோடி ரூபாய் செலவில் 16 முடிவுற்ற பணிகளையும், நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 349.76 கோடி ரூபாய் செலவில் 93 முடிவுற்ற பணிகளையும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 389.93 கோடி ரூபாய் செலவில் 76 முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 59.27 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 38 பணிகளையும் திறந்து வைத்தார். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 27.59 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப் பணிகளுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 495.29 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கும், நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 132.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் முடிவுற்ற கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் தொடங்கி வைத்தல்
தஞ்சாவூர் மாவட்டம் – பாநாசம் மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியங்களை சார்ந்த 252 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் – பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர் ஒன்றியங்களை சார்ந்த 214 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டங்கள்; கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி, குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களை சார்ந்த 36 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டங்கள்; கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியத்தை சார்ந்த தேவியகரம் மற்றும் 3 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டங்கள். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, களக்காடு, பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், இராதாபுரம் ஒன்றியங்களை சார்ந்த 831 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டங்கள்; 4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் – “புனல் 1916”;. என மொத்தம் 1404 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் 5 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மற்றும் புனல்-1916 ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்
குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள் 148 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் மணலி மண்டலம் (மணலி, சின்னசேக்காடு), சோழிங்கநல்லூர் மண்டலம், நீலாங்கரை – கபாலீஸ்வரர் நகர், ராஜா நகர் மற்றும் கண்ணகி நகர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள்), பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் பெருங்குடியில் நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம்; 44 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திலிருந்து புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குடிநீர் குழாய்கள் பதித்து உந்து செய்யும் பணிகள் மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் புதிய கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள்;

பாதாள சாக்கடை திட்டப்பணிகள்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 106 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் உள்ள பல்வேறு கழிவுநீர் உந்து நிலையங்களை மேம்படுத்தும் / வலுவூட்டும் பணிகள் (பகுதி); அம்பத்தூர் மண்டலம், கொரட்டூர் கழிவுநீரகற்று நிலையத்தில் 4 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் துர்நாற்ற கட்டுப்பாட்டு அமைப்பு.ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் கழிவுநீர் குழாய்களை 19 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் விரிவாக்கும் பணிகள்; வளசரவாக்கம் மண்டலம் (காரம்பாக்கம்) பெருங்குடி மண்டலம் (ஜல்லடியான்பேட்டை – ராகவேந்திரா காலனி, சாய்கணேஷ் நகர் மற்றும் ஜெயசந்திரன் நகர்), சோழிங்கநல்லூர் (உத்தண்டி – இராஜாஜி சாலை, ஜீவரத்தினம் தெரு) ஆகிய பகுதிகளில் 141 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம்; 64 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் அடையாறு மண்டலம், எல்.ஐ.சி காலனி கழிவுநீரிறைக்கும் நிலையத்திலிருந்து பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை பிரதான கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் பெருங்குடி மண்டலம், நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை நுண் வடிகட்டி சுத்திகரிப்பு நிலையம் (TTUF); என மொத்தம் 529 கோடியே 54 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 16 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிருவாக இயக்குநரகம் சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
ஆவடி, ஒசூர், சேலம், திருப்பூர், கும்பகோணம் ஆகிய மாநகராட்சிகளில், 97.87 கோடி ரூபாய் செலவில், முதல்வர் படைப்பகங்கள், நகர்புற சுகாதார துணை மையங்கள், பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், ஏரியை மேம்படுத்துதல், பேருந்து நிலையங்கள், அறிவியல் பூங்காக்கள், குடிநீர் விநியோக மேம்படுத்தும் திட்டப்பணிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பணிகள்; மதுராந்தகம், திருவள்ளுர், வானூர், பெரம்பலூர், அறந்தாங்கி, அரியலூர், கடையநல்லூர், அம்பாசமுத்திரம், விளவங்கோடு, பத்மனாபபுரம், அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி, திருச்செந்தூர், வெள்ளகோவில், சத்தியமங்கலம், உதகமண்டலம், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர், குன்னூர், மேட்டுப்பாளையம், இராமநாதபுரம், மேட்டூர், குமாரபாளையம், குளித்தலை, சங்ககிரி, ஆத்தூர் ஆகிய நகராட்சிகளில் 251.89 கோடி ரூபாய் செலவில் நவீன பேருந்து நிலையங்கள், வகுப்பறைகள், நகராட்சி அலுவலகங்கள், குடிநீர் மேம்பாட்டு பணிகள், சுகாதார நிலையங்கள், அறிவுசார் மையங்கள், தினசரி சந்தைகள், குடிநீர் அபிவிருத்தி பணிகள், வணிக வளாகங்கள், புதிய பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 349 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் 93 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பேரூராட்சிகளின் இயக்குநரகத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
தென்திருப்பேரை, கடம்பூர், சாத்தான்குளம், பூலாம்பட்டி, ஏத்தாப்பூர், ஜலகண்டபுரம், கெங்கவல்லி, தெடாவூர், சேந்தமங்கலம், மோகனூர், எருமப்பட்டி, ஒத்தக்கால்மண்டபம், கண்ணம்பாளையம், சர்க்கார்சாமக்குளம், இருகூர், செட்டிபாளையம், வெள்ளலூர், பள்ளபாளையம், பழைய ஜெயங்கொண்டசோழபுரம், ஆரணி, மேலச்சொக்கநாதபுரம், தென்கரை, கலவை, திமிரி, நெமிலி, பனப்பாக்கம், விளாப்பாக்கம், அயோத்தியாப்பட்டணம், மல்லூர், கொளத்தூர், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வேடசந்தூர், எரியோடு, பண்ணைக்காடு, மணலூர்பேட்டை, வடக்கு வள்ளியூர், கோபாலசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, கழுகுமலை, ஜம்பை, சிவகிரி, கொளப்பலூர், புவனகிரி, லால்பேட்டை, நாகோஜனஅள்ளி, ஜமீன் ஊத்துக்குளி, அரகண்டநல்லூர், தேவர்சோலை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள புதிய அலுவலகக் கட்டடங்கள், வாரந்திர சந்தைகள், ஆரம்ப சுகாதார துணை நிலையங்கள், பாலங்கள், அங்கன்வாடிகள், நூலகங்கள், வகுப்பறைகள், சமூகநலக் கூடங்கள், நவீன பேருந்து நிலையம், புதிய திருமண மண்டபம், குடிநீர் விநியோக திட்டப்பணிகள் மொத்தம் 389.93 கோடி ரூபாய் செலவில் 76 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம் அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சமூக சுகாதார மையங்கள், வகுப்பறைகள், பல்நோக்கு மண்டபங்கள், பல்நோக்கு கட்டடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தகன மேடைகள், புதிய அங்கன்வாடி மையங்கள், கால்பந்து மைதானம் மற்றும் இறகுப்பந்தாட்ட மைதானம், சமூகக் கூடம், ஆரம்ப / நடுநிலைப் பள்ளி கட்டடங்கள், செல்ல பிராணிகள் சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பணிகள் மொத்தம் 59.27 கோடி ரூபாய் செலவில் 38 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
மணலி, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் வெள்ள நிவராண மையங்கள், பல்நோக்கு மண்டபங்கள், பொது கழிப்பறை கட்டடங்கள், உள் விளையாட்டு அரங்கம், பாலங்கள், மற்றும் மண்டல அலுவலகம் கட்டும் பணிகள், என மொத்தம் 27.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்.
கலப்பின வருடாந்திர மாதிரியின் (HAM) கீழ், 392 கோடியே 59 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முதற்கட்டமாக அனைத்து மண்டலங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் 1 இலட்சம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் அளவுமானிகளை (Smart Meters) பொருத்தும் பணிகள்; கொடுங்கையூரில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட எதிர் சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை (TTRO) 102 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்,பொது – தனியார் பங்களிப்பு முறையில் (PPP mode) புதுப்பிக்கும் பணிகள் என மொத்தம் 495.29 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

நகராட்சி நிருவாக இயக்குநரகம் சார்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
தஞ்சாவூர், திருநெல்வேலி, கும்பகோணம் மாநகராட்சிகள் மற்றும் திருவள்ளுர், மேட்டுப்பாளையம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகளில் வணிக வளாகங்கள், பேருந்து நிலையம் விரிவாக்கம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், உயிரியல் சுரங்கம் (Bio-Mining), ஆழ்துளை கிணறுகள், திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையம், அரசு மேல்நிலை பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் என மொத்தம் 132.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தேனாம்பேட்டை மண்டலம், லூப் சாலைக்கு “சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சாலை” என்று பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகை திறந்து வைத்தல்
இந்திய சுதந்திர போராட்ட வீரர், 1923-ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் மே தினம் கொண்டாடியவர், பொதுவுடைமைச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணிகளுக்காகச் “சிந்தனைச் சிற்பி” என்று போற்றப்பட்டவர், தொழிலாளர்கள் நலனுக்காகத் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர், சுயமரியாதை, சமதர்மக் கொள்கையில் தளராத உறுதி கொண்டவராகவும் வாழ்ந்த மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிங்காரவேலர் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தேனாம்பேட்டை மண்டலம், லூப் சாலைக்கு “சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சாலை” எனப் பெயர் சூட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் இன்றையதினம் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., பேரூராட்சிகளின் இயக்குநர் எம். பிரதீப் குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர் ரேவதி, சிங்காரவேலர் அவர்களின் வாரிசுதாரர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Municipal Administration and Drinking Water Supply Department ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Drinking Water Drainage Board ,
× RELATED ஒருங்கிணைந்த நில ஆவணம், பட்டா மாறுதல்...