வேலூர், மார்ச் 3: தபால் நிலைய சேமிப்பு திட்டம் மோசடியில் நடவடிக்கை இல்லை எனக்கூறி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நல அலுவலர் மதுசெழியன், தனித்துணை ஆட்சியர் மாறன் உள்பட அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். குறைதீர்வு கூட்டத்தில் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டையை சேர்ந்த 50 வயதுள்ள பெண் மனு அளிக்க வந்தார். அவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் திடீரென ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்டனர். இதையறிந்த கலெக்டர் சுப்புலட்சுமி அங்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி கூறினார். அதன்படி அந்த பெண்ணை, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த பெண் வைத்திருந்த மனுவை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அவர் வைத்திருந்த மனுவில் கூறுகையில், ‘காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை கிளை தபால் நிலையத்தில் ரூ.4 லட்சம் சேமிப்பு பணம் கட்டியிருந்தேன். அலுவலக ஊழியர், அந்த பணத்தை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்துவிட்டார். என்னை போல 20க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்துள்ளனர். பணத்தை மீட்க கோரி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்ைக எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
