×

ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழக்கு; தமிழக அரசாணைக்கு தடை கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

டெல்லி: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1995ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையான உயர் பதவிகளை வழங்கி தமிழ்நாடு அரசு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த பதவி உயர்வு நடைமுறைகள் உரிய விதிகளுக்கு முரணாக இருப்பதாக கூறி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழக அரசின் இந்த அரசாணைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தை இந்திய அரசியல் சட்டம் 32ன் கீழ் நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மனுதாரர் முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகி ரிட் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

Tags : IAS ,Tamil Nadu government ,Supreme Court ,Delhi ,
× RELATED ஃபிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம்...