விநாயகர் கோயில் உடைப்பு; மரங்கள் வெட்டி அழிப்பு,
உண்டியல், சிலையுடன் தப்பி ஓட்டம்
களக்காடு: களக்காடு அருகே போதை கும்பல் கிராமத்துக்குள் புகுந்து, விநாயகர் கோயிலை உடைத்து, பொருட்களை சூறையாடியதுடன், மரங்களையும் வெட்டி வெறியாட்டம் ஆடினர். மேலும் உண்டியல், விநாயகர் சிலையுடன் தப்பி ஓடியது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் மேலத்தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் வெற்றி விநாயகர் கோயிலை அமைத்து, தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் நித்திய பூஜைகளும், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவும் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஒரு கும்பல் கிராமத்துக்குள் கம்பு, அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். இதைப்பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளுக்குள் சென்று பதுங்கினர். பின்னர் அங்கிருந்த விநாயகர் கோயில் கதவை அடித்து உடைத்து உள்ளே புகுந்த கும்பல் பூஜை பொருட்களை நொறுக்கி சூறையாடியதோடு, கருவறையில் இருந்த ஒன்றறை அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையையும் பெயர்த்து எடுத்தனர். தொடர்ந்து கோயில் கதவில் பொருத்தப்பட்டிருந்த உண்டியலை துண்டித்தெடுத்த கும்பல் விநாயகர் சிலை, உண்டியலுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மனைவி மாலாவின் (53) வீட்டு தோட்டத்தில் இருந்த மரங்களையும் வெட்டி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தெரு முழுவதும் பொருட்களும், மரங்களின் கிளைகளும் சிதறி கிடந்தன. இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அடித்து நொறுக்கப்பட்ட விநாயகர் கோயில் அருகே ஒரு கும்பல் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த போதை கும்பல் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் தப்பி ஓடிய கும்பல் பெயர்த்து எடுக்கப்பட்ட விநாயகர் சிலையையும், உண்டியலையும் எங்கு வீசி சென்றனர்? என்பது தெரியவில்லை. அதனை கிராம மக்களும், போலீசாரும் தேடி வருகின்றனர். போதை கும்பல் தூக்கி சென்ற உண்டியல் கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது திறக்கப்பட்டு காணிக்கை பணம் எடுக்கப்பட்டது. அதன் பின் உண்டியல் திறக்கப்படவில்லை. எனவே அதில் ஆயிரக்கணக்கான ரூபாய் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், ‘‘கோயில் அருகே மது அருந்தியதை கண்டித்ததால் அந்த கும்பல் ஏற்கனவே இந்த கிராமத்தை சேர்ந்தவர்களை தாக்கியுள்ளனர். தற்போது கோயிலை உடைத்து சூறையாடியுள்ளனர். எங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்’’ என்றனர்.
