×

வயிற்று புற்றுநோய் விழிப்புணர்வு அவசியம்: டாக்டர் ஆர்.கண்ணன் அறிவுறுத்தல்

 

சென்னை: உலகளவில் ஐந்தாவது இடத்தில் வயிற்று புற்றுநோய் மிகப் பரவலாக காணப்படும் புற்றுநோயாகும். புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வயிற்று புற்றுநோய் பெரும்பாலும் மேம்பட்ட நிலைகளை அடையும் வரை கண்டறிய முடியாததால் இறப்புகளுக்கு காரணமாகிறது. எனவே, நாம் அனைவரும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் அறிந்து கொள்வது அவசியம் என்கிறார், இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஆர்.கண்ணன். வயிற்றுப் புற்றுநோய் என்பது, வயிற்றின் உட்புறச் சுவரில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளர்வதால் ஏற்படும் ஒரு தீவிர நோயாகும். இது, இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோயை பொருத்தவரை, ஆரம்பத்தில் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருந்து, முற்றிய நிலையிலேயே பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. ஆரம்பத்தில் தொடர்ச்சியான அஜீரணம், நெஞ்சு எரிச்சல், லேசான வயிற்று வலி மற்றும் சிறிது உணவு உண்டாலும் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு காணப்படுகிறது.

காரணமற்ற எடை இழப்பு, விழுங்குவதில் சிரமம், வாந்தி (சில நேரங்களில் ரத்தம்), கருமைநிற மலம் மற்றும் சோர்வு. மஞ்சள் காமாலை (தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறம்) போன்ற அறிகுறிகளும் தனிநபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்து மாறுபடலாம். அவ்வகையில், புற்றுநோய் செல்களை அகற்ற அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை, சில சமயங்களில் இலக்கு சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இவற்றை தடுப்பதற்கு, பதப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எனவே, உடல் செயல்பாடுகளில் ஈடுபடவும் மற்றும் சீரான வாழ்க்கை முறையை பின்பற்றி ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும் என்று டாக்டர் ஆர்.கண்ணன் தெரிவித்தார்.

 

Tags : Dr. ,R. Eye ,Chennai ,
× RELATED “திமுகவை சீண்டிப் பார்த்தால்...