சென்னை: புதிய அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதால் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகள் காரணமாக 40 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணைப்படி ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படாததால் பயணிகள் காலை முதலே கடும் அவதி அடைந்துள்ளனர். சேத்துப்பட்டில் நடைமேடைக்கு வெளியே ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நீண்ட நேரம் வரிசையாக நிற்பதால், பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தில் இறங்கி செல்லும் நிலை ஏற்படுகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக வழக்கமாக 10, 11ம் நடைமேடைகளில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் 5, 6ம் நடைமேடைகளில் இருந்து நள்ளிரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களின் பாதை தற்காலிகமாக மாற்றம் செய்து 45 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமாக 208 மின்சார ரயில்கள் இயக்கப்படும் நிலையில், 164 ரயில்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை மாற்றம் இன்று அமலுக்கு வந்த நிலையில், சிக்னல் கோளாறு ஏற்பட்டு முதல் நாளிலேயே ரயில் சேவை முடங்கியது. வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ரயில்கள் இன்று முதல் 20-30 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை யோகியுள்ளது. புறநகர் ரயில்களை பொறுத்தவரை 4 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் சென்னை கடற்கரை தொடங்கி செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில்களின் சேவைதான் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தாம்பரம். சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்குள் வரும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நிலைமையை சரி செய்ய பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த பிரச்சனைக்கு நடுவில் இன்று அதிகாலை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
