×

திருமணத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்; விஜய்க்கு சிபிஐ மூலம் அழுத்தம் தவெக நிர்வாகி பரபரப்பு புகார்

மதுரை: விஜய்க்கு சிபிஐ மூலம் ஒன்றிய பாஜ அரசு அழுத்தம் தர தொடங்கியுள்ளது என அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார்.மதுரையில் உள்ள அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் முனிஷ்குமார். இவர், அப்பகுதி தவெக நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் சுபஸ்ரீ என்பவருக்கும் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது. மணமக்களை வாழ்த்துவதற்காக தவெக கொள்கை பரப்பு செயலராளர் அருண்ராஜ் வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அருண்ராஜ், மணமகனுக்கு சால்வை அணிவித்தார். அப்போது அருகில் நின்றிருந்த மணப்பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக நிருபர்களிடம் அருண்ராஜ் கூறியதாவது: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தது கட்சியின் கொள்கை முடிவு. கூட்டணிக்கு யாரும் வருவார்கள் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது தவறான முடிவு. தலைவர் விஜய் உரிய நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார். எங்களது தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் கிடையாது. அது மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய கடமை. மதவாத சக்திகளிடம் கூட்டணி இல்லை என்று சேலம் மாநாட்டில் விஜய் கூறிவிட்டார். ஒன்றிய பாஜ அரசு விஜய்க்கு முன்பு அழுத்தம் கொடுக்க முயற்சித்தது. இப்போது ஜனநாயகன் படம் மற்றும் சில விஷயங்களில் சிபிஐ மூலம் அழுத்தம் தர தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தனக்கு யாரும் அழுத்தும் தர முடியாது என்று விஜய் கூறி வரும் நிலையில் அக்கட்சியின் நிர்வாகியே ஒன்றிய அரசு சிபிஐ மூலம் அழுத்தம் தர தொடங்கியுள்ளது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : CBI ,Vijay ,Thaveka ,Madurai ,BJP government ,Arunraj ,Munishkumar ,Aruldaspuram ,Subhasree ,
× RELATED உலகமே கண்டிராத வரலாறு காணாத பல...