×

புதுச்சேரி அருகே மணப்பட்டு கடலில் கற்சிலைகள் வீச்சு போலீசார் விசாரணை

பாகூர், பிப். 5: புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு, மூ.புதுக்குப்பத்தில் பல்மைரா கடற்கரை உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு சுற்றுலா திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்டது. அதில் உணவு விடுதிகள், ஓய்வு அறைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டது. பணிகள் முடிவடையாத நிலையில், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருந்தும் இந்த கடற்கரைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடற்கரையில் நேற்று நந்தி மற்றும் ஒரு பெண் தெய்வ கற்சிலைகள் இருப்பதை அங்கு வந்த பொதுமக்கள் கண்டனர். தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் நந்தி சிலை கடல் அலையிலும், அம்மன் சிலை கடற்கரை மணல் பகுதியிலும் இருந்தது. மேலும் சிலைகள் இருந்த இடத்தின் அருகே இரண்டு சாக்கு பைகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஒன்று, வந்து சென்றதற்கான அடையாளமும் காணப்பட்டது. இதையடுத்து கற்சிலைகளை கைப்பற்றிய போலீசார், இந்த சிலையை யாராவது வாகனம் மூலம் கொண்டு வந்து கடற்கரையில் வீசிவிட்டு சென்றார்களா, அல்லது எப்படி இந்த சிலைகள் வந்தது என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலைகளை பாகூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : Manapattu ,Puducherry ,Bacoor ,Palmyra Beach ,Manapattu, Moo. Puducherry ,Kirumambakkam, Puducherry ,
× RELATED உளுந்து பயிருக்கு உரிய விலை...