இம்பால்: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே இனக்கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 60 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். இந்தச் சூழலில், கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி பாஜக மூத்த தலைவர் என்.பிரேன் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு 2025ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டது.
பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும், ஒருமித்த கருத்து ஏற்படாததால் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் ஓராண்டாக சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக முன்னாள் அமைச்சர் யும்னம் கேம்சந்த் சிங் (62) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் யும்னம் கேம்சந்த் சிங் தலைமையிலான என்டிஏ குழு, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து மாநில முதல்வராக அரசு அமைக்க உரிமை கோரியது.
இவருடன் சுராசந்த்பூர மற்றும் பெர்சாவல் ஆகிய இரண்டு மாவட்ட எம்எல்ஏக்களும் ஆளுநரைச் சந்தித்தனர். புதிய அரசு பதவி ஏற்க ஏதுவாக மணிப்பூரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் யும்னம் கேம்சந்த் சிங் விரைவில் முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
