×

விஜய் மக்களையும் பார்ப்பதில்லை; தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை: 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

வாக்குறுதிகள்:

  • ஜல்லிக்கட்டில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
  • அரசால் அங்கீகரிக்கப்படும் இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ரூ.5 லட்சம் மானியம்.
  • மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்
  • மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்கும்!
  • ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
  • முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000ஆக உயர்த்தப்படும்
  • கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தப்படும்
  • இஸ்லாமிய, கிறிஸ்தவ, ஏனைய சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் தரப்படும்
  • மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி;

தமிழ்நாட்டில் என்ன அரசியல் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியவில்லை. கரூரில் 41 பேர் உயிரிழந்ததும் 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதவர் விஜய். பொதுவெளியில் வந்து பார்த்தால் தான் என்ன நடக்கிறது என்று விஜய்க்கு தெரியும். கூட்டணிக்கு எந்தக் கட்சி தலைமை என்றே விஜய்க்கு தெரியவில்லை. கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என அமித் ஷாவே தெளிவுபடுத்திவிட்டார் . விஜய் மக்களையும் பார்ப்பதில்லை, தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லை, செய்தியாளர்களைச் சந்தித்தால்தான் களநிலவரம் விஜய்க்கு புரியும்.

எந்த எந்த கட்சி எந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது என்பதே விஜய்க்கு தெரியவில்லை. ஒரு முறையாவது விஜய் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும், நிருபர் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டு யாரை ஊழல் சக்தி என்று சொல்கிறார். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா ஆட்டிப்படைக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று வந்த செங்கோட்டையனை உடன் வைத்துக்கொண்டு ஊழல் பற்றி விஜய் பேசுவது வேடிக்கையாக உள்ளது என கூறினார்.

சசிகலா குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு; சசிகலா விவகாரம் முடிந்துபோன விஷயம். மீண்டும் மீண்டும் சசிகலா விவகாரம் குறித்து கேட்க வேண்டாம் என கூறினார்.

Tags : Vijay ,Chennai ,Secretary General ,Edappadi Palanisami ,2026 Assembly elections ,Jallikkat ,Jallikatu ,
× RELATED இந்திய-அமெரிக்க ஒப்பந்தம், எல்லை...