×

மாமல்லபுரத்தில் 2 நாள் உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு; 127 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்; பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: மாமல்லபுரத்தில் 2 நாள் நடைபெறும் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அவரது முன்னிலையில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 127 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ள போர் பாயிண்ட் ஷெரட்டான் நட்சத்திர ரிசார்ட்டில் உள்ள கூட்ட அரங்கில் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறை இணைந்து நடத்தும் ‘‘தமிழ்நாடு உலகளாவிய சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு – 2026” நடைபெற உள்ளது. இந்த, மாநாட்டில் சுற்றுலா தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள், மேம்பாட்டாளர்கள், ஆபரேட்டர்கள், ஓட்டல் நிறுவனங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், மேம்பாட்டாளர்கள், டெவலப்பர்கள், முடிவெடுப்பாளர்கள், கூட்டாளர்கள், ஆதரவாளர்கள், சுற்றுலா வாகன நிறுவனங்கள், வர்த்தக நிபுணர்கள், தொழில் முனைவோர்கள் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரபல நிறுவனங்களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் ராஜேந்திரன், டி.ஆர்.பி.ராஜா தா.மோ.அன்பரசன், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்த, மாநாட்டில் சுற்றுலா தொழில், முதலீடுகள், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க சுற்றுலாத் தலங்கள், தமிழ்நாட்டின் கலாச்சாரம், தொழில் துறைகள் முக்கிய பங்கு, சர்வதேச அளவில் சுற்றுலாவின் வளர்ச்சி, சுற்றுலாவுக்காக தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில், மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ – மாணவிகள் இந்த 2 நாள் மாநாட்டில் பங்கேற்க சுற்றுலாத்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும், உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு நடைபெறயுள்ள மாநாட்டு அரங்கிற்கு அருகே 100 மீட்டர் நீளம், 50 அகலம் கொண்ட பிரமாண்ட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விழாவுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்காட்சி அரங்கை பார்வையிட்டார். விழா தொடங்கியதும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் முன்னிலையில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 127 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. மேலும், பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

Tags : 2 Day Global Tourism Summit ,Mamallapuram ,Government of Tamil Nadu ,Chief Minister ,K. ,Stalin ,Chennai ,Tamil Nadu Global Tourism Summit ,K. Stalin ,Tamil Nadu government ,
× RELATED விவசாயிகள் வங்கி கணக்கில் பிப்.15 முதல்...