புதுடெல்லி: உலக மக்கள் தொகையை கணக்கிட்டால் தற்போதைய நிலவரப்படி, 823 கோடியாக இருக்கிறது. இதில் இந்தியாவில் 146.3 கோடியாக உள்ளது. அதாவது உலக மக்கள் தொகையில் 17.7 சதவீதத்தை இந்தியா கொண்டிருக்கிறது. இந்நிலையில் 2025ம் ஆண்டில் மட்டும் பிறப்பு எண்ணிக்கை குறித்த விவரம் வெளியாகி உள்ளது. ஐ.நா. 23.1 மில்லியன் அதாவது 2 கோடியே 31 லட்சம் இருக்கலாம் என கணித்திருந்தது.
அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:2025ம் ஆண்டில் இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரம் என்று கூறியுள்ளது. இது உலகிலேயே ஒரு நாட்டில் ஆண்டில் அதிகபட்ச பிறப்பு எண்ணிக்கையாக கணிக்கப்பட்டு இருக்கிறது. இதே நிலையில் 2024ம் ஆண்டு இந்தியாவில் 2 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 498 குழந்தைகள் பிறந்துள்ளன. சீனாவை விட 3 மடங்கு அதிகம். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 7 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும், கடந்த ஆண்டுகளைவிட குறைந்து வருவதாகவே சொல்லப்படுகிறது.
2025-ம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கையை பொறுத்தவரையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக, சீனாவில் 87 லட்சமாகவும், நைஜீரியாவில் 76 லட்சமாகவும், பாகிஸ்தானில் 69 லட்சமாகவும், காங்கோவில் 46 லட்சமாகவும், இந்தோனேசியாவில் 44 லட்சமாகவும், எத்தியோப்பியாவில் 42 லட்சமாகவும், அமெரிக்காவில் 37 லட்சமாகவும், வங்காளதேசத்தில் 34 லட்சமாகவும், பிரேசிலில் 25 லட்சமாகவும் இருந்துள்ளன. நடப்பாண்டில் (2026) இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2 கோடியே 29 லட்சமாக இருக்கலாம் என ஐ.நா. கணித்திருக்கிறது.
