×

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 1,53,571 பேர் விண்ணப்பம்: தலைமைத் தேர்தல் அதிகாரி

 

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டதை அடுத்து, 1,53,571 பேர் இதுவரை பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 1,53,571 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்து கடந்த 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமான வாக்காளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர் நீக்கம் தொடர்பாக ஆட்சேபனை மனுக்களை வழங்கி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதன்படி, கடந்த 19 முதல் 21-ம் தேதி வரை அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் சார்பில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 248 ஆட்சேபனை மனுக்கள், பெயர்களை சேர்க்க 2 மனுக்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. இதனை அடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடுடாக சென்று எஸ்ஐஆர் விண்ணப்பங்களை வழங்கினர். மேலும், படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடைபெற்றன. டிசம்பர் 4 ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்களை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று வந்தன. அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 11 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீடித்தது. தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் அலுவலர்கள் பெற்று, பதிவேற்றம் செய்தனர்.

இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இறந்தவர்கள் 26,32,672 பேரும், முகவரியில் இல்லாதவர்கள் 66,44,881 பேரும், இரட்டைப் பதிவுகள் 3,39,278 என மொத்தம் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு பின் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்துள்ளது. குறிப்பாக மொத்த எண்ணிக்கையில் 15.18% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Tags : Chief Electoral Officer ,Chennai ,Tamil Nadu ,
× RELATED வாக்குச்சாவடிகளில் புதிதாக வாக்காளர்...