திருவண்ணாமலை, டிச.17: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தமிழ் மாதங்களில் சிறப்புக்குரிய மாதமாக மார்கழி போற்றப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் கோயில் நடைதிறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் முடியும் வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்நிலையில், மார்கழி மாத பிறப்பையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
மேலும், உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், திருவண்ணாமலையில் திருவெம்பாவை அருளிய மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயிலில் நடைதிறக்கும் போதே, அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும், திருவண்ணாமலை மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய சிறப்புக்குரியது. அதையொட்டி, அடி அண்ணாமலையில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மேலும், அலங்கார ரூபத்தில் மாணிக்கவாசகர் கிரிவலம் சென்று அருள்பாலித்தார். மார்கழி பிறப்பையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.
