ஊட்டி : கோடை சீசன் நெருங்கிய நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள தொட்டிகளில் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். எனினும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், மே மாதங்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதேபோல், பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இந்த ஆண்டும் வரும் மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்கான நடவு பணிகள் கடந்த மாதம் துவக்கப்பட்டது. தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்கா உட்பட அனைத்து பகுதிகளிலும் நான்கு மாதங்களுக்கு பின் பூக்கக்கூடிய பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தொட்டிகளிலும் நான்கு மாதங்களுக்கு பின் பூக்கும் பல்வேறு வகயைான மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டு தற்போது நடந்து வருகிறது. நாள் தோறும் தேயிலை தோட்ட பூங்கா தொழிலாளர்கள் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் பாத்திகளிலும் மலர் நாற்றுகள் தற்போது நடவு செய்யப்பட்டு, அவைகள் பனியால் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.